இரு மொழிக் கொள்கையை தாங்கிப் பிடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்க தேவையில்லை.. வைரமுத்து
சென்னை: இரு மொழிக் கொள்கையை தாங்கிப் பிடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்க தேவையில்லை என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை தயார் செய்ய கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டு ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு 2019-இல் தனது அறிக்கையை வெளியிட்டது.

அதன் மீதான கருத்துகளை ஜூன் 30-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த வரைவில் ஓரிரு திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மும்மொழி கொள்கை இதில் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் கூறுகையில் அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications