Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ராமர் ஒரு தொன்மம், அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை".. கீழடி விவகாரத்தில் பாய்ந்து வந்த வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ராமர் என்பது ஒரு தொன்மம், அதற்கு அறிவியல்
ஆதாரங்கள் இல்லை; நம்பிக்கையே அடிப்படை. கீழடியின் தொன்மை என்பதற்கு அறிவியலே அடிப்படை. ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்?" என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டின் கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Keezhadi Vairamuthu keeladi

வைரமுத்து பதிலடி

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர் ஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

ஒன்றிய அமைச்சர்
ஷெகாவத் அவர்கள்
கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க
இன்னும் அறிவியல் தரவுகள்
தேவையென்று சொல்லித்
தமிழர் பெருமைகளைத்
தள்ளி வைக்கிறார்

ஒரு தமிழ்க் குடிமகனாக
அமைச்சர் அவர்களுக்கு
எங்கள் அறிவின் வலியைப்
புலப்படுத்துகிறேன்

கீழடியின் தொன்மைக்கான
கரிமச் சோதனைகள்
இந்தியச் சோதனைச் சாலையில்
முடிவு செய்யப்பட்டவை அல்ல;
அமெரிக்காவில் ஃபுளோரிடாவின்
நடுநிலையான
சோதனைச் சாலையில்
சோதித்து முடிவறியப்பட்டவை

அதனினும் சிறந்த
அறிவியல் தரவு என்று
அமைச்சர் எதனைக் கருதுகிறார்?

சில தரவுகள்
அறிவியலின்பாற் பட்டவை;
சில தரவுகள்
நம்பிக்கையின்பாற் பட்டவை

ராமர் என்பது ஒரு தொன்மம்
அதற்கு அறிவியல்
ஆதாரங்கள் இல்லை;
நம்பிக்கையே அடிப்படை

கீழடியின் தொன்மை என்பதற்கு
அறிவியலே அடிப்படை

ராமரின் தொன்மத்தை
ஏற்றுக்கொண்டவர்கள்
கீழடியின் தொன்மையை
ஏற்றுக்கொள்ளாதது
என்ன நியாயம்?

தொன்மத்துக்கு ஒரு நீதி
தொன்மைக்கு ஒரு நீதியா?

தமிழர்களின் நெஞ்சம்
கொதிநிலையில் இருக்கிறது

தமிழ் இனத்தின் தொன்மையை
இந்தியாவின் தொன்மையென்று
கொண்டாடிக் கொள்வதிலும்
எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை

"தொன்று நிகழ்ந்த
தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்"
என்ற பாரதியார் பாட்டு
எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது

மேலும் பல தரவுகள்
சொல்வதற்கு உள்ளன

விரிக்கின் பெருகுமென்று
அஞ்சி விடுக்கிறோம்

அங்கீகார அறிவிப்பை
விரைவில் வெளியிட வேண்டுகிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு கருத்து

முன்னதாக கீழடி விவகாரம் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தா்ன வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தர குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

மறந்துவிடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய அமைச்சர் சொன்னது என்ன?

இதையடுத்து, கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழ்நாடு அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+