எதிர்பார்ப்பில்லாமல் பேசிய செங்கோட்டையன்.. இதுதான் தொண்டர்களின் எண்ணம் - வைத்திலிங்கம்
சென்னை: அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் பேசியுள்ளதை வரவேற்கிறேன். செங்கோட்டையனின் எண்ணத்தை தான் அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர். நிச்சயமாக எல்லோரும் இதனை வரவேற்பார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உட்பட இன்றைய சூழ்நிலைக்கு கட்சி ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பரிசீலனை
தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும். 2016க்கு பின் பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். 2016க்குப் பின் தேர்தல் களம் அதிமுகவிற்கு போர்க்களமாக மாறிவிட்டது.
பாஜக அதிமுக கூட்டணி
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 2024 இல் 30 இடங்களில் வென்றிருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தேர்தல் வரும் நிலையில் 10 நாட்களில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: அதிமுகவில் இருப்பவர்கள், பிரிந்தவர்கள், பொதுமக்கள் என எல்லாருமே மீண்டும் இணைந்தால் தான் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆட்சியை கொண்டு வர முடியும். இல்லையெனில் ஆட்சியைக் கொண்டு வர முடியாது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். எங்கே சென்றாலும் மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் சொல்கின்றனர்.
தொண்டர்களின் எண்ணம்
தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த எண்ணம் வரவேற்கத்தக்கது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நன்மதிப்பை பெற்றவர். 27 இல் இருந்து ஒருமுறை தவிர தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் பேசியுள்ளார். அதனை மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்.
அதிமுகவை ஒன்றிணைக்கும் குழு இருப்பதே இன்றைக்குத்தான் தெரியும். எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் செங்கோட்டையன் இருக்கிறார். அவருக்கு அங்கு ஆதரவாக பலர் இருக்கின்றனர். பண்ணாரி எம்எல்ஏ, முன்னாள் எம்பி சத்தியபாமா ஆகியோர் அவருடன் இருக்கின்றனர்.
10 நாட்கள் கெடு
செங்கோட்டையனின் எண்ணத்தை அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர். நிச்சயமாக எல்லோரும் இதனை வரவேற்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு கொடுத்துள்ளார். இல்லையெனில் அந்த முயற்சியை அவர் தலைமையில் எடுப்பார் என்பது தான் அர்த்தம். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உட்பட இன்றைய சூழ்நிலைக்கு கட்சி ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும் என்றார்.












Click it and Unblock the Notifications