இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிட்டால் புதிய கட்சி! ஓபிஎஸ் முன்பே வைத்திலிங்கம் அதிரடி
சென்னை: இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையவில்லையென்றால் புதிய கட்சி உருவாக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார். அவர் பேசுகையில், இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும்.

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படும். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அதிமுக தொண்டர்கள் உரிமை கழகமாக மாறியுள்ளது. 3 ஆண்டுகளாக கொடுக்க ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறும். கழகம் ஒன்றிணைய வேண்டும், இல்லாவிட்டால் எங்களின் முடிவை மக்கள் ஏற்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள். நாம் கண்ணீர் விட்டு அழும் நிலையில் அதிமுக உள்ளது. தவறான நடைமுறை, தவறான பொதுக் குழு, தவறான பாதையில் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது.
சில சர்வாதிகாரிகளால் நம்முடைய இயக்கம் கடந்த 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸுடன் வைத்திலிங்கம் இணைந்தார். அன்று முதல் இன்று வரை சுமார் 8 ஆண்டுகளாக அவர் அவருடன் பயணித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அதிமுகவிலிருந்து யாராவது திமுகவில் இணைந்தால் அப்போது வைத்திலிங்கத்தின் பெயரும் அடிபடும். ஆனால் அவர் இன்று வரை ஓபிஎஸ்ஸை விட்டு விலகவே இல்லை.
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம்.
எனவே டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பெரியார், அண்ணா ஆகியோரின் புகைப்படங்களுடன் பண்ருட்டி ராமசந்திரன், ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோரின் படங்களுடன் இடம்பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications