சட்டசபையில் மாஜி தங்கமணியுடன் பேசியது என்ன? விடாமல் கேட்ட செய்தியாளர்.. வானதி ருசிகர பதில்
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் என்ன பேசினீர்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக எம்எல்ஏவும், பாஜக மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் ருசிகரமான பதிலை அளித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன் தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை படிக்காமல் அதில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் இருப்பதால், தான் உரையை படிக்கவில்லை என கூறிவிட்டு அமர்ந்தார்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவுதான் ஆளுநர் உரையை படித்தார். அதன் முடிவில் ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு விமர்சிக்கவும் செய்தார். இதையடுத்து நாட்டுப் பணி இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு அவை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.
அதாவது வானதி சீனிவாசன் அமர்ந்திருந்த இருக்கை நோக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சென்றார். அங்கு வானதியுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தங்கமணி பேச அதற்கு வானதி பதில் அளிக்க, வானதி கேள்வி எழுப்ப அதற்கு தங்கமணி பதில் சொல்ல என இப்படியே 15 நிமிடங்கள் சென்றது. இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முறிந்த கூட்டணியை புதுப்பிக்க மீண்டும் பேச்சுவார்த்தையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
1998களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்து 30 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டும் 18 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு பெரும்பான்மையில்லை. எனினும் அதிமுகவை நம்பி பாஜக ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமரானார்.
ஆனால் ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே பாஜகவுக்கான ஆதரவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாபஸ் பெற்றார். இதனால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. அப்போது முதல் பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என ஜெயலலிதா அறிவித்த நிலையில் அவரது மறைவுக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.
இரு கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல்களை சந்தித்தன. ஆனால் தமிழகத்தை பொருத்தமட்டில் இரண்டிலும் பெரிய அளவில் இரு கட்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாம் தோல்வி அடைந்தோம் என அதிமுகவினர் ஆங்காங்கே பேச தொடங்கினர். இது பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இது போன்ற மனஸ்தாபங்களால் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. எனினும் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என வியூகங்கள் ரெக்கை கட்டி பறந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். எனினும் பாஜகவும் அதிமுகவும் மறைமுகமாக கூட்டணி பேரங்களில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்ட நிலையில் வானதியும் தங்கமணியும் சட்டசபையில் ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் தங்கமணியுடன் பேசியது கூட்டணி தொடர்பாகவா என கேட்டார்.
இதற்கு வானதி, "ஏங்க சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு யாராவது கூட்டணி பற்றி பேசுவார்களா, இன்று கூட என்னுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ அமர்ந்திருந்தார். அவருடனும் நான் நிறைய பேசினேன். அதற்காக அவருடன் நான் கூட்டணி குறித்து பேசுகிறேன் என அர்த்தமா, கூட்டணி பேசுவதற்கென இடம் இருக்கிறது, முறை இருக்கிறது, அதற்கென குழு இருக்கிறது என்றார்.
எனினும் விடாமல் செய்தியாளர் அப்போ என்னதான் பேசினீர்கள் என கேட்டதற்கு " டீயில் ரொம்ப ஜாஸ்தியா சர்க்கரை இருந்தது என பேசினோம்ங்க, நன்றிங்க என சொல்லிவிட்டு போனார்.












Click it and Unblock the Notifications