என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது -வானதி சீனிவாசன்
திருச்சி: அரசியலை பொறுத்தவரை எதுவும் நிரந்தரம் கிடையாது என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணியில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
மேலும், வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜக தமிழகத்தில் வெற்றிபெற வியூகம் அமைத்து செயல்பட்டு வருவதாக கூறினார்.
நாங்க யாரு தெரியுமா.. பாஜக முக்கிய தலைவர்களே.. எங்க கட்சியில் சேரப்போறாங்க...சொல்றது யாருனு பாருங்க!
கூட்டணி விரிசல்
அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி உறவு சுமூகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு அந்தக் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக மேலிடம் அறிவிக்கும் என தமிழக பாஜகவினர் மாறி மாறி பேட்டிக் கொடுக்க அது அதிமுகவை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.
நிர்வாகிகள் பேட்டி
ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேட்டியளிப்பதற்கு முன்பு வரை அதிமுக-பாஜக கூட்டணியில் பெரியளவில் விரிசல் இல்லை. எப்போது அவர் கட்சி தொடங்குகிறேன் என்றும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என அறிவித்தாரோ அன்று முதலே பாஜகவுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. நிர்வாகிகளின் பேட்டிகளிலும் வித்தியாசத்தை உணர முடிகிறது.
முதல்வர் வேட்பாளர்
இதனிடையே திருச்சியில் பேட்டியளித்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை என்றும் இதனால் தான் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என கூற வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
நிரந்தரமில்லை
தங்களை பொறுத்தவரை வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றிபெற்று உறுப்பினர்களை சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருப்பதாக கூறினார். மேலும், அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது என்றும் எந்தக் கூட்டணி நிரந்தரம் என்று யாரும் சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.