வண்டலூரில் டபுள் சர்ப்ரைஸ்! உயிரியல் பூங்காவுக்கு வந்த குஜராத் விருந்தாளி! சுற்றுலா பயணிகள் ஹேப்பி
சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பிரத்யேக உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஜொலி ஜொலிக்கின்றன.. சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பூங்கா நிர்வாகம் மற்றொரு சர்ப்ரைஸ் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.. அது என்ன தெரியுமா?
சென்னை புறநகரில் அதாவது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, இயற்கையான காப்புக்காடு சூழலில் 180-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களையும், 2,500-க்கும் அதிகமான விலங்குகளையும் பராமரித்து வருகிறது..
முக்கியமாக இங்குள்ள சிங்கங்கள் உலாவும் லயன் சஃபாரி மற்றும் மான் சஃபாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இடங்கள் என்றே சொல்லலாம்.. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சஃபாரி பகுதிகளில், பிரத்யேக வாகனங்கள் மூலம் விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலேயே நேரில் காணும் வசதி உள்ளது..
வண்டலூர் உயிரியல் பூங்கா
தற்போது கோடை விடுமுறை என்பதால், . தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வருகை தந்தபடி உள்ளனர்.. இதற்காகத்தான், கடந்த மாதத்தில் இருந்தே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன..
நிலவி வரும் கடும் கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக யானைகளுக்குக் குளிர்ந்த நீர் தெளிக்கும் ஷவர் குளியல் வசதி, புலிகள் உள்ளிட்ட விலங்குகள் நீந்தி மகிழ கூடுதல் தண்ணீர் வசதி, மற்றும் பறவைக்கூண்டுகளின் மேல் வெப்பத்தைக் குறைக்க ஈரமான சணல் சாக்குகள் போர்த்தப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
மேலும், விலங்குகளின் உடல் வெப்பத்தைத் தணிக்கக் குளிர்ச்சி தரும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவாக வழங்கப்படுவதுடன், புதிதாக வந்துள்ள இமயமலைக் கரடிகள் மற்றும் குரங்குகள் உற்சாகமாக விளையாட ஊஞ்சல்கள், சறுக்கு மரச்சட்டங்கள் போன்ற அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்களின் வசதிக்காகப் பூங்கா சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, அவர்கள் நடந்து செல்லும் பாதைகளில் வெப்பத்தைக் குறைக்க Sprayers எனப்படும் தானியங்கி நீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
பூங்கா செய்துள்ள இந்த வசதிகள், ஏற்பாடுகள் அனைத்துமே அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சர்ப்ரைஸாக உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது..
ஆம், குஜராத் மாநிலத்தில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பெண் ஆசிய காட்டு கழுதை கொண்டுவரப்பட்டுள்ளது.
டபுள் சர்ப்ரைஸ்
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'குஜராத் மாநிலத்தில் உள்ள சக்கர்பாஹ் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் ஆசிய காட்டு கழுதை விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வண்டலூர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, வெள்ளை மயில் (1ஆண், 2 பெண்), சருகு மான் (2 ஆண், 2 பெண்) மற்றும் மஞ்சள் அனகோண்டா பாம்பு (பாலினம் குறிப்பிடப்படாத 2) வழங்கப்படுகின்றன. இந்த பரிமாற்றத்தின் மூலம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவலிருந்து ஒற்றை ஆண் ஆசிய காட்டு கழுதைக்கு தற்போது பொருத்தமான இணை கிடைத்துள்ளது" என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள், தேர்தலில் வாக்களிக்க வசதியாக விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications