சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்டிரல் வழியாக இயக்கப்படும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் குறிப்பிட்ட நாட்களில் தாமதமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை சென்டிரல் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.30 மணி, மதியம் 2.25 மணி மற்றும் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16057, 16053, 16203) வருகிற ஜூன் 26 மற்றும் 28-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16054) ஜூன் 26 மற்றும் 28-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து மாலை 5.55 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089) ஜூன் 27-ந் தேதி இயக்கப்படாது. அதேபோல், ஜோலார்பேட்டையில் இருந்து காலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16090) ஜூன் 28-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை வந்தே பாரத் ரயில்
எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22153), ஜூன் 27-ந் தேதி எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இரவு 12.50 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.15 மணிக்கு கோவை செல்லும் வந்தே பாரத் ரயில் (20643), ஜூன் 19 மற்றும் 26-ந் தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். அதே ரயில் ஜூன் 20, 21, 22, 23, 25, 27 மற்றும் 28-ந் தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை சென்டிரல் - மும்பை, திருவனந்தபுரம், பெங்களூர் - சென்னை சென்டிரல், மங்களூரு - சென்னை சென்டிரல், மைசூரு - சென்னை சென்டிரல், அகமதாபாத் - சென்னை சென்டிரல் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications