முஸ்லீம் மக்கள் ஏன் ‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்க்கிறார்கள்? சுற்றிச் சுழலும் சர்ச்சை!
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, வந்தே மாதரம் கட்டாயமாக்கப்படுவது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என இஸ்லாமியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், ஆளுநர் அர்லேகர் தமிழக முதல்வராக ஜோசப் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யை தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் முதலில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் கடுமையாக கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, முஸ்லீம்கள் வந்தே மாதரம் பாடலை எதிர்க்கின்றனர். இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்', நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு தாரக மந்திரமாக விளங்கியது. இருப்பினும், காலப்போக்கில் இந்தப் பாடல் அரசியல் மற்றும் மத ரீதியான விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது.
வந்தே மாதரம் பாடல் 1870-களில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழிக் கலவையில் எழுதப்பட்டது. இது அவரது புகழ்பெற்ற 'ஆனந்த மடம்' என்ற நாவலில் இடம்பெற்றது. வந்தே மாதரம் என்பதற்கு "தாயே உன்னை வணங்குகிறேன்" என்பதே அடிப்படைப் பொருள். இங்கு 'தாய்' என்பது பாரதத் தாயைக் குறிக்கிறது.1905-ல் நடந்த வங்கப் பிரிவினையின் போது, இந்தப் பாடல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு மாபெரும் போராட்டக் குரலாக மாறியது.
வந்தே மாதரம் பாடலில் பாரதத் தாயை 'துர்கா' தேவியுடன் ஒப்பிடுகிறார் சாட்டர்ஜி. முஸ்லிம்கள் அல்லாவை மட்டுமே வணங்குகிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தின்படி, அல்லாவை தவிர வேறு எவரையும் அல்லது உருவங்களையும் வணங்குவது அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், இஸ்லாமிய மத நம்பிக்கையுடையோர் இப்பாடலைப் பாடுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனந்த மடம் நாவல் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டது என்பதால், அதில் இடம்பெற்ற இப்பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பார்க்கப்படலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஜன கண மன: இந்தியாவின் 'தேசிய கீதமாக' (National Anthem) அறிவிக்கப்பட்டது.
வந்தே மாதரம்: 'தேசியப் பாடலாக' (National Song) தகுதி பெற்றது.
அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், 'வந்தே மாதரம்' விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கிற்காக, 'ஜன கண மன' பாடலுக்கு இணையான கௌரவம் அதற்கு உண்டு என்று அறிவித்தார்.
இன்று 'வந்தே மாதரம்' என்பது ஒரு பாடலையும் தாண்டி, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், இதைப் பாடுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ் மத சுதந்திரத்தையும், பிரிவு 19-ன் கீழ் கருத்து சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது என்ற வாதம் இஸ்லாமியர்களால் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications