திருப்பத்தூரில் தெருவெல்லாம் தண்ணீராய் ஓடுதே.. கனமழைக்கு பள்ளி கல்லூரிகளும் விடுமுறை.. நியூஸை பாருங்க
வேலூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.. தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அத்துடன், திருப்பத்தூர் மாவட்டத்திலும் மழை வெளுத்து கட்டுகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது.. நேற்றைய தினம் கடலூர் மாவட்டத்தில், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ,வடலூர், நெல்லிக்குப்பம், திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

அதேபோல பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் கிட்டத்ட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.. அதிலும், சிவகங்கையில், கிருங்காக்கோட்டை, செல்லியம்பட்டி, எஸ்.வி. மங்கலம், காளாப்பூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது..
திருவண்ணாமலை செங்கம்
அதேபோல நேற்று பகல் முழுவதும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயில் கொளுத்திய நிலையில், திடீரென மாலையில் மழை வரத்துவங்கிவிட்டது.. இந்த மழையானது இரவு நேரத்திலும் நீடித்தது.. தருமபுரி மாவட்டத்தில் அரூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல பெய்தது. இப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மாவட்டங்கள் குளிர்ந்து காணப்படுகின்றன.
இந்நிலயில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் என். செந்தாமரை கண்ணன் சொல்லும்போது, "வடக்கு - தெற்கு தாழ்வு மண்டலம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியில் இருந்து வடக்கு இலங்கை வரை, தமிழ்நாடு கடலோரப் பகுதி வழியாக செல்கிறது.
சனிக்கிழமைக்கு பிறகு, நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. சனிக்கிழமை, நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
சென்னையில் மழை
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
லேசான மழை பெய்தாலும் வெப்பம் சற்று குறையும் என்பதால் சென்னை மக்களும் மழை எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்திலும் விடிய விடிய மழை கொட்டியது.. வழக்கம் போல வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இரவெல்லாம் பெய்த கனமழை காரணமாக இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
வாணியம்பாடியில் மழை
ஏற்கனவே வாணியம்பாடியில் பலத்த மழை பெய்து வருகிறது.. கடந்த சில நாட்களுக்குமுன்புகூட, நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீதிருந்த பெரிய பாறை உருண்டு தெருவில் விழுந்து, அம்மக்களுக்கு பீதியை தந்திருந்தது நினைவிருக்கலாம்.
நேற்றுகூட வாணியம்பாடி: அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் புகுந்துவிட்டது.. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது.. இதைக்கேள்விப்பட்டு எம்எல்ஏ செந்தில்குமார் நேரிலேயே கிளம்பி வந்து ஆய்வு செய்தார்.
அதேபோல, வாணியம்பாடியில் மழை வருவதால் பாலாற்றில் நீர் பெருக்கெடுக்கிறது.. ஆனால், ஆந்திர எல்லை வரை சுத்தமாக வரும் பாலாறு , தமிழ்நாட்டில் வாணியம்பாடி வந்ததும் நகராட்சி கழிவுகளாலும், தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளாலும் ,அரசின் அலட்சியம்தாலும் மாசு அடைந்து பாலாறு அசுத்தமாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications