திருமாவளவன் செய்த அந்த ஒரு காரியம்! ஜெயராஜ் எப்படி வன்னி அரசாகி அமைச்சரானார்? இது விஸ்வரூப அரசியல்
சென்னை: வன்னியரசு சமூக நீதி அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார்.. நீண்ட காலப் போராட்டங்கள், சமூகநீதிக்கான இடைவிடாத குரல்கள் மற்றும் எளிய மக்களின் உரிமைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு, இன்று தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். எனவே தமிழ்நாட்டு அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகப் பதிவாகியுள்ளது. யாரிந்த வன்னியரசு?
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள அயன்ரெட்டியார்பட்டி கிராமத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் வன்னியரசு.. இவரது இயற்பெயர் ஜெயராஜ்..

ஜெயராஜ் டூ அமைச்சர்
ஜெயராஜ் என்பவர் வன்னியரசாக மாறி, தமிழகத்தின் அதிகார மையத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது அவரது அரசியல் பயணத்தின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது.
வன்னியரசுவின் அரசியல் பாதை முட்கள் நிறைந்த பயணமாகும். சின்ன வயதிலிருந்தே தனது சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை நேரில் கண்டு வளர்ந்தவர்.. தன்னுடைய அப்பா போலவே , தானும் கம்யூனிச சிந்தனைகளாலும், பின்னாளில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டார்.
தமிழீழ மக்களின் மீதான தீராத பற்றினால்தான் தன்னுடைய பெயரை வன்னியரசு என்று மாற்றிக்கொண்டாராம்.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியின் அடிமட்டத் தொண்டராக பயணத்தைத் தொடங்கினார். இதனால் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் உருவெடுத்தார்.. விசிகவில் பல இக்கட்டான சூழல்களில் கட்சியின் கொள்கை முழக்கங்களை உரக்கச் சொல்லியவர்.
விசிக வன்னியரசு
அவரது அரசியல் வாழ்வில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தான் வளர்ந்த கிராமத்தில் நிலவிய சாதிய மோதல்கள் மற்றும் விசிக கொடிக்கம்பம் நடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள், அவரை மேலும் சமூகநீதிப் போர்க்களத்தில் தீவிரமாகச் செயல்படத் தூண்டியது.
அதேபோல அவரது அரசியல் வாழ்வில் தமிழீழ மக்களின் உரிமைகள் முக்கிய இடத்தைப் பிடித்தன. அவர்கள் மீதான ஈடுபாடு காரணமாக, இலங்கையின் வடக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
தமிழீழ மக்களின் உரிமைகளுக்காகப் பலமுறை இலங்கையின் வடக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் துயரங்களை உலகுக்குக் கொண்டுவந்தவர் வன்னியரசு.
வன்னி அரசு யார் தெரியுமா
2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளிலும் அவர் இலங்கை சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில முக்கிய நிர்வாகிகளுடன் நெருக்கமான தொடர்பு இருந்ததாக கூறப்பட்டதால், ஒரு கட்டத்தில் வெளிநாடு செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற காலத்திலும், தனது தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை அவர் வெளிப்படையாகவே பதிவு செய்தார்.
தேர்தல் அரசியலை பொறுத்தவரை, தொடக்கக் காலத்தில் வானூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட வன்னியரசுக்கு இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.
திண்டிவனம் வன்னியரசு
திண்டிவனம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை எதிர்த்துப் போட்டியிட்ட வன்னியரசு, கடும் போராட்டத்திற்குப் பிறகு 63,833 வாக்குகள் பெற்று, 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார். பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து வந்த அவர், இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது, சமூகநீதி அரசியலை முன்னெடுப்பவர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
வன்னியரசு சமூக நீதி அமைச்சராக பதவியேற்க உள்ள செய்தி கடந்த 4 நாட்களாகவே வட்டமடித்தவாறு இருந்தது.. அப்போதிருந்தே அவரது சொந்த கிராமமான அயன்ரெட்டியார்பட்டியில் விழாக்கோலம் பூண்டது.. இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், உறவினர்களும், கிராம மக்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது வன்னியரசு சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாலும், அவரது வேர்கள் இன்றும் மண்ணுடனேயே இருக்கின்றன. சாதாரணத் தொண்டராகத் தொடங்கி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இந்த உயர்வு, களத்தில் நின்று உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
திருமாவளவன் செய்த சூப்பர் காரியம்
தமிழகத்தின் புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் வன்னியரசு.. பதவியேற்பின்போது அவரது கையை பிடித்து நாற்காலியில் திருமாவளவன் உட்கார வைத்தது, சிறுத்தைகளை சிலிர்க்க வைத்துவிட்டது..
இனி வரும் காலங்களில் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களிலும், சமூக நீதி காப்பதிலும் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் வட்டாரங்களில் அவரது இந்த நியமனம் விசிகவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications