பாமகவுக்கு எகிறும் நம்பிக்கை.. வில்சனின் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட்.. எதிர்பார்ப்பில் 10.5% ஒதுக்கீடு
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு வர உள்ளது
சென்னை: இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்த ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.. இது பாமக தரப்பினருக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
வன்னியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது உள் இடஒதுக்கீடு ஆகும்.. இதை கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி காலக்கட்டத்தில் நிகழ்ந்தேறியது. வன்னியர்களின் பெருங்கனவும் நிறைவேறியது..!
கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்..
இந்த ஒரு காரணத்தினால் தான் திருமணத்தைப் பற்றி வெளியில் நான் பேசவில்லை..இசை வாணியின் உருக்கமான பதில்
தீர்மானம்
இந்த தீர்மானம் வெற்றி பெற்றதும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமாக வழங்கப்படுகிறது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பிறகு இந்த அளவு மாற்றி அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அப்போது நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. இது பாமகவுக்கு கூடுதல் மகிழ்ச்சியை பெற்று தந்தது.. எப்படியும் இனி அடுத்தடுத்த தேர்தல்களில் இதற்கான பலன் கிடைக்கும் என்றும் நம்பியது.
படுதோல்வி
ஆனால், வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்கிய உடனேயே நடத்தி முடிக்கப்பட்ட சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களிலேயே அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது பெருத்த ஷாக்தான்.. இதனிடையே வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து 25-க்கும் அதிகமான வழக்குகள் தொடர்ந்து வந்தன... அதற்குள் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது.
ஸ்டாலின்
ஆட்சி மாறியதால் உள் ஒதுக்கீடு சட்டம் தொடருமா? அல்லது நிராகரிக்கப்பட்டுவிடுமா? அல்லது திருத்தி அமைக்கப்படுமா? என்ற பல சந்தேகங்கள் எழுந்தன.. டாக்டர் ராமதாஸ் இதை பற்றி அறிக்கையும் வெளியிட்டிருநத்ர்.. சட்டசபை கூட்டத்திலும் இதை பாமக தரப்பினர் கேள்வி எழுப்பினர்.. ஆனால் இவர்களின் ஐயத்தை முதல்வர் ஸ்டாலின் போக்கினார்.. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஸ்டாலின் அதிரடியாக அறிவித்த பிறகுதான், பாமக தரப்புக்கு நிம்மதியே வந்தது... இதற்கான அரசாணையும் ஜூலை 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
7 கேள்விகள்
இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென அந்த தீர்ப்பு வந்தது.. வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த மதுரை ஹைகோர்ட், சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பிறகே, இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா? என்று அடுத்தடுத்த 7 கேள்விகளை கேட்டது..
விளக்கம்
இதற்கு அரசு தரப்பில் பதில் சொல்லப்பட்டது.. ஆனாலும் அந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று சொல்லி, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்து அந்த சட்டத்தையே ரத்து செய்தது கோர்ட். இதை பாமக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. தமிழக அரசு, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது.. இதற்கான மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்தது.. அதில் சில விவரங்களையும் எடுத்து சொல்லி உள்ளது..
மேல்முறையீடுகள்
குறிப்பாக, "இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது.. இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த ஹைகோர்ட் மதுரை கிளையின் உத்தரவு தவறானது... இந்த உத்தரவால் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது... அதனால் ஹைகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்" என்று அதில் கோரப்பட்டிருந்தது.. அதேபோல பாமக தரப்பும் சுப்ரீம்கோர்ட்டில்2 மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.. அதேபோல, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தமிழக சட்டத்துறை, தமிழ்நாடு உயர்கல்வித் துறை ஆகியவற்றின் சார்பிலும் சுப்ரீம்கோர்ட்டில் தனித்தனியாக 3 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு
இப்படி பல மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருப்பினும் தமிழக அரசின் வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவினை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டுள்ளது.. இதை பாமக தரப்பினரே ட்வீட் பதிவிட்டு வருகின்றனர்.. அந்த ட்வீட்களில், "10.5 விழுக்காடு வழக்கு, அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்ததை ஏற்று தலைமை நீதிபதி அனுமதி" என்று பதிவிட்டுள்ளனர்... அத்துடன் கனத்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
வில்சன்
அன்று, திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினா, அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு அறிவிக்கவும், திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்தான் வில்சன்.. இறுதியில் அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சட்டரீதியாக வாதாடி வெற்றி பெற காரணமாக இருந்தவர்தான், வில்சன் என்பது குறிப்பிடத்தக்கது.