லட்டு மாதிரி சான்ஸ்! வடக்கே வன்னியர்.. கொங்கில் கவுண்டர்! அசால்ட்டாய் வாக்கை தட்டி தூக்கும் அதிமுக?
சென்னை: பல மாதங்களாக டேக் ஆஃப் ஆகாமல் இருந்த அதிமுக பாஜக கூட்டணி தற்போது வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதன் மூலம் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் வன்னியர் சமூக வாக்குகள் கிடைக்கும் நிலையில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆதரவு வாக்கு வங்கியான கவுண்டர் சமூக வாக்கு வங்கியும் இருப்பதால் அதிமுகவினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். மேலும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தால், 2026ல் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு தான் வெற்றி என்கின்றனர் அதிமுகவினர்.
2026 சட்டமன்றத் தேர்தலை மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் எதிர் நோக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக தலைமையை கைப்பற்றிய பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்.
அதே நேரத்தில் எதிர் தரப்பான திமுக அசுர கூட்டணி பலத்துடன் இருப்பதால் கூட்டணி இல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பது எடப்பாடிக்கு தெரியும். அதனால் தான் கடந்த காலங்களில் எதிர்த்த பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி
அதே நேரத்தில் பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருந்தது. அதை தவிர வேறு எந்த கட்சிகளும் சேரவில்லை. இந்த நிலையில் தான் இன்று அதிமுக பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. இதனை அன்புமணியும் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கி பலம் சற்று அதிகரித்துள்ளது.
பாமக அதிமுக
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக தனித்தனியாக போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்று இருந்த நிலையில் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் கூடுதல் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது அதிமுக, பாஜக, பாமக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் கட்சிகளின் வாக்கு சதவீதம் தானாகவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு வன்னியர் சமூக வாக்குகள் இருக்கிறது.
வன்னியர் வாக்கு வங்கி
தற்போது பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் இருந்தாலும் பெரும்பாலான நிர்வாகிகளும் தொண்டர்களும் அன்புமணி பின்னால் இருப்பதால் நிச்சயம் தங்களுக்கு தான் ஆதரவு என அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான கவுண்டர் சமூக வாக்குகளும் இருக்கிறது. கூடுதலாக பாஜக, பாமக தொண்டர்களும் சேர்வதால் இந்த முறை நம்பிக்கைகள் அதிகரித்துள்ள அந்த கூட்டணிக்கு என்கின்றனர் அதிமுகவினர்.
தேமுதிக கூட்டணி
இது ஒரு புறம் இருக்க தேமுதிக, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு வந்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்பதால் அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் டெல்டாவிலும் தென் மாவட்டங்களிலும் வலுவாக இருக்கும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் சேரும் போது நிச்சயம் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என நம்பிக்கையை தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications