வெற்றி கொடி கட்டிய வசந்த குமார் அண்ணாச்சி! MBA மாணவர்களுக்கு ஆகச் சிறந்த ரோல் மாடல்!
சென்னை: வசந்த் அண்ட் கோ நிறுவனரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்த குமார் கொரோனாவால் மறைந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் குறித்த சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டவர் வசந்த குமார். ஹரி பெருமாள் நாடார் -தங்கம்மையார் தம்பதிக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்த வசந்த குமார் வீட்டின் கடைக்குட்டி செல்லம். அகஸ்தீஸ்வரத்தில் பியூசி வரை முடித்துவிட்டு நாகர்கோவில் இந்து கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார்.

பள்ளிப் பருவத்திலேயே விடுமுறை நாட்களில் சர்பத் கடை போடுவது, திருவிழா காலங்களில் பலூன் கடை போடுவது என பெற்றோரின் பாரத்தை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்நிலையில் கல்லூரி காலத்தை நிறைவு செய்த வசந்த்குமார் தனது மூத்த சகோதரர் குமரி அனந்தன் சென்னையில் வசித்ததால் அவருக்கு உத்தாசையாக இருப்பதற்கு குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து சேர்கிறார்.
சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த வி.ஜி.பி. வீட்டு உபயோகப்பொருட்கள் ஷோரூமில் விற்பனையாளராக தனது பணியை தொடங்கிய வசந்த்குமார் தொழிலில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். வசந்த்குமாரின் பேச்சும், சுறுசுறுப்பும் விற்பனையை இரட்டிப்பாக்கியதால் அவர் கிளை மேலாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையே கட்சி சார்ந்த மன்றம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வசந்த் குமார் காவல்நிலைய விசாரணைக்கு சென்றிருக்கிறார்.
இதையறிந்த வி.ஜி.பி. குழும நிர்வாகம் வசந்த்குமாரை அழைத்து உங்களால் கடைக்கு கெட்டப் பெயர் ஏற்படும் எனக் கூறி மும்பையில் உள்ள கிளைக்கு மாறுதலாகி செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது. மொழி தெரியாத மாநிலத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டதால் பணியை துறக்க முடிவெடுத்த வசந்த்குமார் விஜிபி குழுமத்திடம் கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு வெளியேறுகிறார்.
வேலையை துறந்த நிலையில் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்ற வசந்த்குமாருக்கு அசோக் நகர் ஹவுசிங் போர்டு மேனேஜர் ஞானசேகரன் தனக்கு சொந்தமான கடையை கொடுத்து உதவுகிறார். திசை தெரியாமல் நின்ற வசந்த்குமாருக்கு கலங்கரை விளக்கின் வெளிச்சக் கீற்று தென்படத் தொடங்கியது. உடனடியாக வசந்த் அண்ட் கோ என்ற போர்டை பொருத்தி கடையை தொடங்குகிறார்.
அதைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து தனது வியாபார சாம்ராஜ்யத்தால் தமிழகத்தின் நம்பர் 1 டீலர் என்ற பெருமையை வசந்த் அண்ட் கோ நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுத்தார். கடந்த 2019 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார், கடந்த 2020ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று கொரோனாவால் காலமானார்.












Click it and Unblock the Notifications