TVK: அதிமுகவை அதிர வைத்த வாசுதேவநல்லூர் மாஜி எம்எல்ஏ மனோகர்.. விஜய்யின் தவெகவில் இணைந்தார்
சென்னை: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (Vasudevanallur) தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ மனோகர் தவெகவில் (TVK) இணைந்தார். சென்னையில் நடிகர் விஜயை நேரில் சந்தித்த மனோகர் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். இவர் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமியின் சொந்த அண்ணன் ஆவார். இதனால் தவெக ஒரே கல்லில் அதிமுக - பாஜகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் கட்சி மாறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய தவெகவில் பல்வேறு தலைவர்கள் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் தவெகவில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ மனோகர் இணைந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார்.

2016ல் வெற்றி பெற்றவர்
சென்னையில் இன்று நடிகர் விஜயை சந்தித்து, மனோகர் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி) சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2021ல் நூலிழையில் தோல்வி
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் களமிறங்கினார். மனோகரன் மொத்தம் 66,363 ஓட்டுகள் பெற்றார். ஆனால் அவரை விட மதிமுக வேட்பாளர் சதன் திருமலை குமார் 68,730 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். மனோகரன் 2,367 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மீண்டும் போட்டி?
இந்நிலையில் தான் தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் மீண்டும் அவர் வாசுதேவநல்லூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. அவருக்கு தவெக வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பாஜக தலைவரின் சகோதரர்
மேலும் தற்போது தவெகவில் இணைந்த மனோகர், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ மட்டுமின்றி, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமியின் சொந்த அண்ணன் ஆவார். இதன்மூலம் ஒரே கல்லியில் அதிமுக - பாஜகவுக்கு தவெக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
அண்ணன் - தம்பிக்கு சான்ஸ்
அதோடு இந்த முறை வாசுதேவநல்லூர் தொகுதியை அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கிறது. பாஜக சார்பில் வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிட ஆர்வமாக உள்ளார். இவர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கம். தென்காசி மாவட்டத்தில் நடந்த ‛என் மண் என் மக்கள்’யாத்திரைக்கான பொறுப்பை ஆனந்தன் அய்யாசாமி தான் செய்திருந்தார்.
மேலும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புடன் நல்ல நட்பில் இருக்கிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சட்டசபை தேர்தலில் வாசுதேவநல்லூரில் களமிறங்கும் வகையில் அவர் கள பணியை தொடங்கி உள்ளார்.
இதனால் அதிமுக சார்பில் தனக்கு சீட் கிடைக்காது என்று நினைத்து மனோகர் தவெகவில் ஐக்கியமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணியில் ஆனந்த் அய்யாசாமிக்கும், தவெகவில் மனோகருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அண்ணான் - தம்பி இடையே கடும் போட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications