"யெஸ்.. போஸ்ட்மேன்"தான்.. என்னா விளையாட்டு.. பெரிய சாட்டையடி இது.. ஆளூர் ஷாநவாஸுக்கு ஒரே பூரிப்பு
ஆளுநர் போஸ்ட்மேன் தான் என்பது தீர்ப்பில் தெரியவந்துள்ளது என்கிறார் ஷாநவாஸ்
சென்னை: பேரறிவாளன் விடுதலையில், ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது என விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் மனு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.
4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
சுப்ரீம்கோர்ட் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவை செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது... தேச வரலாற்றில் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது..
வரவேற்பு
இந்த தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, வைகோ, கேஎஸ் அழகிரி, கமல், உள்ளிட்ட பல தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.. அந்த வகையில், விசிகவின் திருமாவளவன், வன்னியரசும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸூம் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அவர் சொன்னதாவது:
தாய்மை
"30 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக அற்புதம் அம்மாள் என்கிற ஒற்றை தாயின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற ஒரு மகத்தான வெற்றியாக இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் இதுபோன்று விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இந்த தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது.
மனிதரின் விடுதலை
இது பேரறிவாளன் வழக்கு பேரறிவாளன் என்கிற ஒற்றை மனிதரின் விடுதலை என்று சுருக்கி பார்த்து விட முடியாத அளவிற்கு இதில் மாநில அரசினுடைய அதிகாரம் இன்றைக்கு உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அரசியல் அமைப்பு சட்டம் 161 ஆவது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அந்த பிரிவின் கீழ் மாநில அரசு ஒரு தீர்மானத்தை ஏற்றினாலோ, ஒரு சட்டமன்றம் கூடி முடிவு எடுத்தாலும் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் அதில் இருக்கிற ஒன்று.
பந்தாடினார்கள்
ஆனால் அதை அவமரியாதை செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தையே அவமரியாதை செய்யக்கூடிய வகையில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தன்னுடைய கருத்தின் அடிப்படையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு இன்றைக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்திருக்கிறது. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது, குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார்.. போராடினால்தான் முடிவெடுப்பார் என்றெல்லாம் இதில் பந்தாடி விளையாடிக் கொண்டிருந்த ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது.
முப்பரிமாண மகிழ்ச்சி
மாநில அரசின் அதிகாரமும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. பேரறிவாளனும் 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே இது நமக்கு ஒரு முப்பரிமாண மகிழ்ச்சி நமக்கு தருகிறது.. இதில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது, இவ்வளவு நாளும் நாம் சொல்லிக் கொண்டிருந்த அந்தக் கருத்து அதாவது ஆளுநருக்கு அதிகாரம் இல்லை..
Recommended Video
போஸ்ட்மேன்
மாநில அரசுக்கு அதிகாரம் மாநில அரசினுடைய முடிவை ஏற்று செயல்பட வேண்டிய இடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய முதலமைச்சரின் மொழியில் சொல்வதென்றால் ஒரு போஸ்ட்மேன் என்று சொன்னார் அல்லவா? அது இந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் உடைய தீர்ப்பின் மூலம் அவர் போஸ்ட் மேன் தான்.. நம்முடைய சட்டமன்றம் தான் உயர்வானது மதிப்பானது அதிகாரம் மிக்கது என்பது மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது" என்றார்.