திமுக கூட்டணியை விட்டு வெளியேற திருமாவளவன் முடிவு- பாஜகவை முன்வைத்து நாடகம்: அண்ணாமலை சரமாரி அட்டாக்
திருமாவளவன், திமுக கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டார் என்கிறார் அண்ணாமலை.
சென்னை: திமுக கூட்டணியை விட்டு வெளியேற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்; இதற்காக பாஜக எதிர்ப்பு என்பதை முன்வைத்து நாடகமாடுகிறார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: நேற்று திருமாவளவன் ஒரு கூட்டம் போட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்ட துரைவைகோ, கே.பாலகிருஷ்ணன் என பலர் அதில் பங்கேற்றனர். இவர்கள் எல்லாம் மார்க்கெட்டில் விலை போகாத பொருட்கள். திருமாவளவனுக்கு திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்பது ஆசை. அதற்கு ஏன் கூட்டம் போட்டு பாஜகவை திட்டிவிட்டு வெளியே வருகிறீர்கள்?

திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்றால் வந்துவிட வேண்டியதுதானே.. அதற்கு ஏன் பாஜகவை விமர்சிக்க வேண்டும். பாஜக என்பது இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கக் கூடிய இயக்கம். எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். எத்தனை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கக் கூடிய இயக்கம்.
திருமாவளவனுக்கு கொஞ்சம் ஆசை.. துணை முதல்வராக வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அதனால் முதல்வர் ஸ்டாலினிடம் கூட்டணியைவிட்டு போய்விடுவேன்.. கூட்டணியைவிட்டு போய்விடுவேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறிக் கொள்ளுங்கள். ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக பாஜகவை திட்டுகிறார் திருமாவளவன். ஏன் திருமாவளவன் இப்படி ஒரு டிராமா போடுகிறார்?
திருமாவளவன், திமுக கூட்டணியைவிட்டு வெளியே போக வேண்டும் என முடிவு செய்துவிட்டார். ஆனால் அவர் போகிற கூட்டணியில் யாரெல்லாம் இருக்கக் கூடாது என்கிறார். பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கிறார்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. சமூக நீதிக்கு எதிராக திமுக நடத்துகிறது எனில் திருமாவளவன் வெளியே வர வேண்டும். ஆனால் பாஜகவை திட்டிவிட்டு ஒரு பில்டப் கொடுத்துவிட்டு அதைவைத்து ஏன் வெளியே வர வேண்டும்? எங்களை ஏன் திருமாவளவன் பகடைக்காயாக பயன்படுத்த வேண்டும்? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாமக-பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருகாலத்திலும் இருக்காது. பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக மோதக் கூடிய ஒரே கட்சி விசிக மட்டும்தான் என்றார். அத்துடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் காரை இந்துத்துவா சக்திகள் சுற்றி வளைத்து முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி பேசிய திருமாவளவன், தமிழ்நாடு காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது எனவும் விமர்சித்தார். இதனையே தமது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
மேலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுக் கொண்டே தமிழ்நாடு அரசையும் காவல்துறையையும் விமர்சித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் இந்த கூட்டத்துக்கு திருமாவளவன் அழைத்திருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்திருந்தார் வேல்முருகன். அதனால் ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தின் போது வேல்முருகன் பெயரையும் அவரது கட்சிப் பெயரையும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிடாமல் இருந்தார். திமுக கூட்டணியை நோக்கி பாமக நகரக் கூடும் என செய்திகள் வெளியாகும் நிலையில் பாமகவுக்கு எதிரான திருமாவளவன், வேல்முருகன் இருவரும் ஒரே குரலில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications