இரட்டை இலக்கத்தில் சீட்.. முதல்வர் தயாராக இருக்கிறார்! விசிக நிர்வாகி கொடுத்த அப்டேட்
சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் எங்கள் கட்சிக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்க முதல்வர் தயாராக இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கத்தமிழன் கூறியிருக்கிறார்.
இந்த முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இது குறித்து கூறும் அக்கட்சியினர்,

"நாங்கள் காங்கிரஸை விட பலமான கட்சியாக இருக்கிறோம். இருப்பினும் எங்களுக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு விபத்து. 25 ஆண்டுகளுக்கு முன்னரே எங்களுக்கு கலைஞர் கருணாநிதி 10 தொகுதிகளை ஒதுக்கியிருந்தார். அப்படி இருக்கையில் இப்போது 6 தொகுதிகளை கொடுத்து எங்களை ஓரம் கட்டுவது ஏற்புடையதல்ல. ஜெயலலிதா கூட எங்களுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருந்தார். இந்த தேர்தலில் நாங்கள் 12 தொகுதிகளை எதிர்பார்த்திருக்கிறோம். அதை கொடுக்க முதல்வரும் தயாராக இருக்கிறார்" என்று சங்கத்தமிழன் கூறியிருக்கிறார்.
வழக்கமாக தேர்தல் நேரங்களில் கூடுதல் தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்பது சாதாரணமானதுதான். ஆனால் திருமாவளவன், தனது கட்சியை அடிமட்டத்திலிருந்து தேர்தலுக்காக மாற்றியமைக்க தொடங்கியிருக்கிறார். அதாவது முதற்கட்டமாக மாவட்ட செயலாளர்களை அதிகரிக்கும் பணியில் தீவிரம் காட்டியிருக்கிறார். முன்னதாக 88 என இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது மூன்று இலக்கமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என 234 மா.செ.களை நியமிக்க திருமா திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் வட மாவட்டங்களில் மட்டுமல்லாது, தென் மாவட்டங்களிலும் கட்சியை வளர்த்தெடுக்க திட்டமிட்டிருக்கிறார்.
அடுத்ததாக விசிகவை பொது நீரோட்டத்திற்குள் கலப்பது. அதாவது இக்கட்சி தலித்துகளுக்கானது மட்டும் கிடையாது. அனைத்து தரப்பினருக்குமானது என்பதை தெளிவுப்படுத்தும் விதத்தில் தலித் அல்லாதோர் மற்றும் பெண்களுக்கு, நிர்வாகிகளுக்கான பதவியில் 10% ஒதுக்கீடு கொடுத்து, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வலுவான கட்சி அமைப்பை உருவாக்க திருமா திட்டமிட்டு வருகிறார்.
இதற்கேற்ப கட்சிக்குள் இருந்து, வேட்பாளர்களுக்கு பலரும் அடி போட தொடங்கியிருக்கின்றனர். 10க்கும் அதிகமானோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதால், திமுகவிடமிருந்து கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதை தவிர கட்சிக்கு வேறு வாய்ப்பு இல்லை. இப்படி கிடைக்கும் தொகுதிகளை சரியாக பயன்படுத்தி கட்சியை வளர்க்க வேண்டும் என்பதில் திருமாவளவன் உறுதியாக இருப்பதாக கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications