நேத்து சினிமால இருந்து வந்தவங்க துணை முதல்வர்..விசிக இல்லாமல் திமுக ஜெயிக்காது! ஆதவ் அர்ஜூனா அதிரடி
சென்னை: வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது எனவும், நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது எனது தலைவர் (திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சர் ஆக முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார் விசிகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா.
கடந்த சில வாரங்களாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவரான திருமாவளவனும் அரசியல் செய்திகளில் முதலிடம் பிடித்து வருகின்றனர். ஆளும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது இடம் பெற்றிருக்கிறது.

இருந்த போதும் சட்டம் ஒழுங்கு, மது ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருவது ஆளுங்கட்சிக்கு சற்றே நெருக்கடியை ஏற்படுத்தியது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தற்போது மது ஒழிப்பு மாநாட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அதற்குப் பிறகு, அதில் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என பேசியது அரசியலில் பரபரப்பை கிளப்பியது. திமுக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணி என்பதை நோக்கி விடுதலை சிறுத்தைகள் பயணித்து வருவதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என வீடியோவை போடுவதும் இந்த அதை டெலிட் செய்வதும் என ஒரு நாள் முழுவதும் செய்தது பேசு பொருளானது. இந்நிலையில், வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது என விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றியிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா," வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது எனது தலைவர் ஏன் துணை முதலமைச்சர் ஆக முடியாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கான அடித்தளம்.
கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வழிகாட்டுதலோடு எப்போதும் குரல் கொடுக்கும். அதிமுகவை பொறுத்தவரை அதனை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த தேர்தலில் திமுக 37 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் அதிமுகவோ 33 சதவீத வாக்குகளை பெற்றது. வரும் தேர்தலில் கூட்டணி, பிரச்சார வியூகங்களை வகுத்தால் வெற்றி பெரும். அந்தளவுக்கு அக்கட்சியின் அடிப்படை கட்டமைப்பு உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்தில் வெறும் 16 எம்பி தொகுதிகளை வென்ற போதும், நான்கு முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளை கைப்பற்ற முடிந்தது. அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததாக கூறினாலும், அதன் வாக்கு வங்கி சரியில்லை. அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் அதே கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இங்கு யாருமே பெரிய கட்சி கிடையாது. தமிழகத்தில் நாங்கள் தான் பெரிய கட்சி என்று கூறுபவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா நின்றது போல தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று இருக்கலாம். கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக ஜெயித்து இருக்க முடியாது. திருமாவளவனுக்கு மட்டுமல்ல, கே பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோருக்கும் உரிய பொறுப்பும், பதவியும் கொடுக்க வேண்டும்" என பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications