அதிமுக கூட்டணியில் விசிக? நஷ்டம் யாருக்கு தெரியுமா? சொந்த காசில் சூனியமா?
சென்னை: விசிக நடத்தப் போகும் மது ஒழிப்பு மாநாடு பற்றி கருத்து கூறும் திமுக அமைச்சர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி கூட்டணிக்கு எதிராகப் போடப்படும் அனைத்து பந்துகளுக்கும் சிக்சர் அடித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 2 மாநாடுகள் திமுக அரசுக்கு தலைவலி தரும் விசயமாக மாறியிருக்கிறது. ஒரு பக்கம் விஜய் தனது மாநாட்டை நடத்துவதற்கு வேகம் காட்டி வருகிறார். மற்றொரு பக்கம் திமுக கூட்டணியில் இருந்துவரும் விசிக திடீரென்று மது ஒழிப்பு என ஒரு புதிய மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருமாவளவன், விருப்பம் இருந்தால் அதிமுக இந்த மாநாட்டில் கலந்துகொள்ளலாம் என்று ஒரு சின்ன ஜன்னலை திறந்துவிட்டார். அவரது பேச்சு இப்போது கூட்டணிக்குள் குழப்பமா என்ற கோணத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மது ஒழிப்பு மாநாட்டை விசிக நடத்தத் திட்டமிட்டுள்ள இடமும் பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சியை 'குறி' வைத்துள்ளது விசிக. அங்கேதான் கள்ளச்சாராய உயிர்ப்பலிகள் நடந்தன. அது திமுக ஆட்சிக்குக் கரும்புள்ளியாக மாறிய ஊர். அங்கேயே மாநாடு நடந்தால் அந்தச் சம்பவத்தைப் பேச்சாளர்கள் கட்டாயம் சுட்டிக் காட்டுவார்கள். அந்தப் பேச்சு ஒருவேளை திமுக கூட்டணிக்குள் ஒரு உரசலை உருவாக்கலாம். அப்படியும் சொல்லப்படுகிறது. விசிக மாநாடு தொடர்பாகப் போடப்படும் அனைத்து கேள்விகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வருகிறார்கள் திமுக அமைச்சர்கள்.
இன்று டாஸ்மாக் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமைச்சர் முத்துசாமி, "முதல்வர் ஸ்டாலின் ஒரே கையெழுத்து மூலம் மதுக்கடைகளை மூடிவிடுவார். அவருக்கு இந்தக் கடைகளை நடத்துவதில் விருப்பம் இல்லை. ஆனால், அதை உடனடியாக செய்ய முடியாது. அதனால் பல விளைவுகள் ஏற்படும். மக்களின் மனங்களை மாற்றுவதன் மூலம்தான் இதை ஒழிக்க முடியும். விசிக மாநாடு நடத்துவது சரிதான்" என்கிறார்.
இந்தச் சர்ச்சை தொடர்பாகப் பேசி கருத்து கூறியுள்ள பத்திரிகையாளர் பிரியன், "திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் முதலில் ஏன் போகவேண்டும்? அதற்காக வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், திமுக மீது விசிகவுக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை கடந்த வருடம் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. இந்த முறை திமுக விருந்தில் கலந்து கொண்டது.
அதேபோல பழனி முருகன் மாநாட்டை நடத்திய திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, 'கல்லூரிகளில் கந்தசஷ்டி கலசம்' பாட வேண்டும் எனச் சொன்னதை சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக எதிர்த்தன. அப்படியான தருணத்தில் இந்த மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்ட இருக்கிறது. அதனால் உடனே மாநாட்டை தொடர்புப்படுத்தி சிலர் கூட்டணி விட்டு விசிக போகப் பார்க்கிறது என்று பேசுகிறார்கள்.
அதிமுக வலிமையாக இல்லை. அதேபோல பாஜகவுடன் அதிமுக திரும்பக் கூட்டணி வைக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. இப்போது அதிமுகவின் நிலைமையே கேள்விக்குறியாக இருக்கும் போது திருமா எதற்கு கூட்டணி மாற வேண்டும்? திருமா அதிமுக பக்கம் போனால் பாமகவைக் கூப்பிட முடியாது. பாஜகவையும் கூப்பிட முடியாது. அதிமுக எப்படி பலமான கூட்டணியாக மாற முடியும்? விஜய் புதியதாக அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். அவர் அதிமுக கூட்டணிக்குப் போக வாய்ப்பே இல்லை. விஜய் ஏற்கெனவே அடிபட்ட, உதைபட்ட கட்சிகளுடன் இப்போதே கூட்டணி வைத்தால் மக்களை அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவரை ஒரு மாற்றுக் கட்சியாக யாரும் நினைக்க மாட்டார்கள். எனவே அவரும் வரவாய்ப்பு இல்லை. பிறகு எப்படி அதிமுகவை திருமா தேர்வு செய்ய முடியும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி என ஏற்பட்டால், திமுகவின் வெற்றி வாய்ப்பு கூடும். முன்பே திமுக கூட்டணியிலிருந்து வெற்றி பெற்றதால்தான் விசிக கட்சி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. வரும் சட்டசபையில் இதே கூட்டணி தொடர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். எனவே திருமா தெரிந்தே இந்தத் தவறை செய்யமாட்டார். அத்துடன் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை திமுக எதிர்க்கவில்லை. உதயநிதியிடம் கேட்டபோது, 'அதிமுக விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளட்டும்' என்கிறார்.
மா.சுப்பிரமணியன் விசிக மாநாடு நடத்துவது நல்ல விசயம் என்கிறார். விசிக மது ஒழிப்பு மாநாட்டை திமுக பெரிய விசயமாகவே எடுத்து கொள்ளவில்லை. அப்படித்தான் தோன்றுகிறது. இப்போது அதிமுக பக்கம் விசிக போகப்போகிறது என்ற சர்ச்சை மூலம் ஒரு லாபம் திருமாவுக்கு கிடைக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் 2026இல் கூடுதல் தொகுதிகளைக் கேட்கலாம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications