Rathan pandit: மூடநம்பிக்கை ஒழிய வேண்டும்! ஜோதிடத்தை நம்பாதீர்கள்! விஜய்க்கு வன்னியரசு அட்வைஸ்!
சென்னை: மூடநம்பிக்கை ஒழிப்பு தேவை என்றும் ஜோதிடத்தை நம்பாதீர்கள் என நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விசிகவின் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு, விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளார். தவெகவின் ஜோதிடர் ராதன் பண்டிட்டிற்கு தமிழக அரசு பதவி கொடுக்கப்பட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய்யின் ஜோதிடரும் தவெகவின் செய்தி தொடர்பாளருமான ரிக்கி ராதன் பண்டிட் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது பலரது கண்டனங்களுக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய் கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து நடத்தப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் விசிகவின் எம்எல்ஏவும், அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவருமான வன்னியரசு பேசுகையில், நமது அரசு, நமது அரசு என குறிப்பிட்டிருந்தார். அப்போது தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என பேசியிருந்தார்.
வன்னியரசு இந்த அரசுக்கு நீண்ட கோரிக்கையை வைத்திருந்தார். குறிப்பாக மீனவர்களின் துயரத்தை எடுத்துரைத்தார். மேலும் ராதன் பண்டிட்டின் பெயரை சொல்லாமல் மூடநம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும். ஜோதிடரை நம்பாதீர்கள் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வன்னியரசு ஏற்கெனவே ட்விட்டரில் கூறியிருப்பதாவது: முதல்வருக்கு ஜோதிடர்:
அறிவியலுக்கு புறம்பான நியமனத்தை திரும்பப்பெறுக!
ஆஸ்தான ஜோதிடர்கள்' என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. சனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், 'ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்' 'தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்' என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
'அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்' ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. 'அறிவியல் மனப்பான்மையை' (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே 'தொழிலாக' கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?
மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்! என குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications