"சூர்யாவை மிரட்டும்.. பாமக ரவுடிக்கும்பலை காவல்துறை கைது செய்ய வேண்டும்..' வன்னி அரசு பரபர ட்வீட்
சென்னை: நடிகர் சூர்யாவை மிரட்டும் பாமக ரவுடிக்கும்பலை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் சூர்யாவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ட்வீட் செய்துள்ளார்.
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் தீபாவளி சமயத்தில் நேரடியாக அமேசான ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம்.
இந்தப் படம் வெளியான போதே நடிகர்களின் நடிப்பு, கதைக் கரு, படம் எடுக்கப்பட்ட விதம் ஆகியவற்றை பலரும் புகழ்ந்து தள்ளினர்.

ஜெய் பீம்
மேலும், இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பங்களிப்பு, கம்யூனிஸ்ட் கட்சியினரின் செய்த உதவி, போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட ராசா கண்ணு ஆகியோர் குறித்து இணையத்தில் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்த படம் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. அதாவது வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக வன்னியர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கிளம்பிய சர்ச்சை
ராசாகண்ணுவை அடித்தே கொன்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தின் உண்மையான பெயரான அந்தோணி சாமி என்பதற்குப் பதிலாகக் குருசாமி என மாற்றியது. படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் அந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் உள்ள காலெண்டரில் வன்னியர் சாதியைக் குறிப்பிடும் வகையில் இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த காலெண்டரில் இருந்த படம் மாற்றப்பட்டது.

ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு
இருப்பினும், சர்ச்சை ஓய்ந்தபாடு இல்லை. வன்னியர் சமூகத்தைக் குறித்து தவறான கருத்துக்களைப் பரப்புவதற்கு எதிராக, 2டி எண்டர்டெயின்மெண்ட், அமேசான், சூர்யா, ஜோதிகா உட்பட ஐந்து பேருக்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி சார்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வன்னியர் சமூகத்தைக் குறிக்கும் கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி கிரிமினல் வழக்கு மற்றும் நஷ்ட ஈடுக்கு சிவில் வழக்கு தொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு
இது குறித்து நடிகர் சூர்யா, அமேசான் ஓடிடி தளம் சார்பாக இதுவரை எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. இதனிடையே இணையத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், இதற்காக #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டரில் சூர்யாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

பாமக ரவுடிக்கும்பலை கைது செய்க
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டரில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும் பாமகவுக்கு எதிராகவும் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நடிகர் சூர்யாவை மிரட்டும் பாமக ரவுடிக்கும்பலை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும். நடிகர் சூர்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

பாமக கும்பல் ஆதிக்கம் பக்கம்
அதேபோல வன்னி அரசு மற்றொரு ட்வீட்டில், "ஆதிக்கத்தை தக்க வைக்கத்துடிப்போருக்கும் அந்த ஆதிக்கத்தை தகர்க்க நினைப்போருக்கும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். சமத்துவம் நிலைநாட்டும் வரை. நடிகர் சூர்யா சமத்துவம் பக்கம் நிற்கிறார். பாமக கும்பல் ஆதிக்கம் பக்கம் நிற்கிறது. #weStandwithSurya" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications