திருமாவை நாடிய சூர்யா.. ட்வீட் போட்டு பாராட்டி அரவணைக்கும் விசிக.. இதுதான் காரணமா?
சூர்யாவுக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை: ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜெய்பீம் படம் பல்வேறு தரப்பினரின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளது... இந்த திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு விவாதங்களையும், அதனை தொடர்ந்து இருளர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு பக்கம், விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் தாங்கியும் வருகிறது.. பாமக தரப்பில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக கூறி கண்டனங்களும், எதிர்ப்புகளும் வெளியாகி வருகின்றன.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் அகற்றப்பட்டாலும், பாமக தரப்பில் இன்னும் கொந்தளிப்பு அடங்கவில்லை.

ஆதரவு
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவை பாராட்டி எழுதிய கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு உதவிடக் கோரியிருந்தார்.. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா பார்வதி அம்மாவிற்கு உதவும் விதமாக ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

காசோலை
அதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவை நேரில் சந்தித்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

திருமாவளவன்
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், உழைக்கும் மக்களின் உள்ளங்களையும் உழைப்போருக்காக உழைப்போரின் உள்ளங்களையும், உவப்பூட்டி ஈர்க்கும் உயர்ந்த நெஞ்சம்! கண்ணீர் உகுக்கும் கடைசி மனிதர்களின் கவலையை வீழ்த்தும் கனிந்த நெஞ்சம்! துகள் துகளாய் நொறுக்கப்பட்டோரின் துயர்துடைக்கும் துணிந்த நெஞ்சம்! கலைநாயகனுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

அறிக்கை
திருமாவளன் சூர்யாவை பாராட்டுவது இது 2வது முறையாகும்.. ஏற்கனவே, ஜெய்பீம் குறித்து திருமா கருத்து சொல்லி இருந்தார்.. "துணிந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூக பொறுப்புணர்வையும், முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தி இருக்கும் 'கலை நாயகன்' சூர்யாவையும், அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் மனமார பாராட்டுகிறோம்" என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

கடிதம்
இதையடுத்துதான், பாமக தரப்பில் கொந்தளிப்புகளும், கண்டனங்களும் சூர்யாவுக்கு அதிகரிக்க தொடங்கியதாகவும், அதனாலேயே திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்ததாகவும் கூறப்பட்டது.. ஒருபக்கம் பாமகவின் கிளையான வன்னியர் சங்கம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதும், மற்றொரு பக்கம் போலீசில் புகார் தரப்பட்டுள்ளதும், இன்னொரு பக்கம், சூர்யாவை தாக்கினால் பரிசு என்று அறிவிக்கப்பட்டு வருவதும் என இப்படி நாலாபக்கமும் சூர்யாவுக்கு நெருக்கடிகள் சூழ்ந்து வருகிறது.

ஆதரவு
இந்நிலையில்தான், திருமாவளவனின் தயவை மறைமுகமாக சூர்யா நாடியதாகவும், அதற்கு திருமாவும் ஆதரவை தரும் வகையில் சூர்யாவை பாராட்டி 2வது முறையாக ட்வீட் போட்டுள்ளதாகவும் கருதப்பட்டு வருகிறது. சுருக்கமாக சொன்னால், யாரிடம் நெருங்கினால் பாமக தரப்பு கதிகலங்குமோ, அந்த இடத்தை நெருங்கி உள்ளார் சூர்யா என்பதே இதன் அர்த்தம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!












Click it and Unblock the Notifications