டபுள் கேம்.. பாலஸ்தீன் - இஸ்ரேல் போரில் இந்தியாவின் மதிப்பை கெடுத்த பாஜக அரசு! திருமாவளவன் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வாக்கெடுப்பில் பங்கேற்காத பாஜக அரசின் இரட்டை வேடத்தைக் கண்டிக்கிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீன் நிலங்களை மீட்கவும், இஸ்ரேல் ராணுவம் காசா மீது பல ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காகவும், அல் அக்சா மசூதியின் புனிதத்தை கலங்கப்படுத்தியதாகவும் கூறி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலால் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

VCK Thirumavalavan condemn Indias abstinence from voting resolution in UN for ceasefire in Gaza

இதனை தொடர்ந்து பாலஸ்தீனுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காசாவில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை மீதும் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐநா பொது சபையில் ஜோர்டான் நாடு தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விடுத்து உள்ள அறிக்கையில், "ஐக்கிய நாடுகளின் பொது மன்றம் வெள்ளிக்கிழமையன்று நிறைவேற்றிய தீர்மானத்தில், 'இஸ்ரேலியப் படைகளுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே "உடனடியான, நீடித்த மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தரைப்படை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் கூறுவதால், காஸாவில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகளை "தொடர்ச்சியாகவும், போதுமான அளவிலும், தடையின்றியும்" வழங்க வேண்டும் என்றும் ஐநா தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்; பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்; காஸாவில் உள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரழிவு நம் கண்களுக்கு முன்னால் விரிந்து கொண்டிருக்கிறது" என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை 120 நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில் இந்தியா அந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது வரலாற்றுப் பிழையாகும். பாஜக அரசின் இந்தச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.

ஒருபுறம் பாலஸ்தீனத்தை ஆதரித்துக்கொண்டு இன்னொருபுறம் இஸ்ரேல் தொடுத்துள்ள போரையும் மறைமுகமாக ஆதரிப்பது இந்தியாவின் நன்மதிப்பை உலக அரங்கில் கெடுப்பதாக உள்ளது. இது இந்திய அரசின்மீது களங்கத்தை ஏற்படுத்தும் கறையாகப் படிந்துள்ளது. காஸா மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இப்போதாவது இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்திக் குரலெழுப்ப வேண்டும். 'ஐ.நா. பொதுமன்றத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்துப் போர் நிறுத்தம் செய்யவேண்டும்' என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+