விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்! திருமாவளவன், தினகரன் ஆழ்ந்த இரங்கல்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒவ்வொரு நாளும் பேரதிர்ச்சியை தரக் கூடியதாக இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப்புக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சென்னை மண்ணடி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமது யூசுப் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் தமது இரங்கல் செய்தியில், விசிக மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீரவணக்கம் என கூறியுள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடன் இலகுவாக பழக கூடிய,நல்ல பண்பாளரான முஹம்மது யூசுப் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்,கட்சியினர்,நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரின் குடும்பத்திற்கு மன அமைதியை தந்தருள பிரார்த்திக்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. முகமது யூசுப் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். இனிமையாகப் பழகி, எல்லோரிடமும் நட்பு பாராட்டக்கூடிய திரு. யூசுப் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், வி.சி.க தலைவர் அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும், அக்கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. இரங்கல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு.முகமது யூசுப். அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல். திருமாவளவன்.MP அவர்களுக்கு அணுக்கத் தொண்டராகவும், தோழராகவும் இருந்து தோளோடு தோள் நின்று களப்பணியாற்றிய அவரது இழப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும், திரு.திருமாவளவன்.எம்பி. உள்ளிட்ட கட்சியின் தோழர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட இரங்கல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அன்புச்சகோதரர் முகமது யூசுப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்ணன் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிக உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.












Click it and Unblock the Notifications