கள்ளக்குறிச்சி கலவரம்: திமுகவை சீண்டும் விடுதலை சிறுத்தைகள்! அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கேள்வி
சென்னை: பள்ளி மாணவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்கொள்ளாமல் கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பதிலேயே குறியாக இருப்பது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கியில் கடந்த 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி இறப்புக்கு நீதிகோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

திருமாவளவன் கண்டனம்
முன்னதாக ஆங்கில நாளேடு ஒன்றில் மாணவி மரணத்தின் பின்னணியில் ஆதி திராவிடர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், "மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர்.

உளவுத்துறையில் சாதியவாதிகள்
அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. இது தொடர்பான ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே இது தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதிய வன்மம்
அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது." என்று தெரிவித்து உள்ளார்.

வன்னியரசு குற்றச்சாட்டு
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள பதிவில், 60 ஆதிதிராவிட இளைஞர்களை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது மற்றொரு பதிவில், "பள்ளி பிள்ளைகளின் மரணங்கள் பெரும் சந்தேகங்களையும் துயரத்தையும் தருகிறது. பிள்ளைகளிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் உண்டு. அதற்கான பணியை செய்யாமல் கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பதிலேயே குறியாக இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications