முழு மாடு வாங்கி பிரியாணி.. பாஜகபோல் காசுக்கு வந்த கூட்டமில்ல! விசிக மாநாடு - வன்னியரசு நெகிழ்ச்சி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய வெல்லட்டும் ஜனநாயகம் மாநாடு பாஜகவுக்கு முடிவுரை எழுதும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, “மாநாடு என அறிவிப்பார்கள்; மாநாட்டுக்கு ஆட்களை கூட்ட பணம் கொடுப்பதாக சொல்லி அழைப்பார்கள்; உணவுடன் வாகன செலவையும் ஏற்றுக்கொள்வதாக சொல்வார்கள்.50,000 ரூபாய் கொடுத்து விட்டு ஆட்களை கூட்டி வரவில்லை என ரவுடிகளாக மாறி கொலைவெறித் தாக்குவார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பாஜக இப்படித்தான் மாநாடுகளை நடத்துகிறது. அப்போதும் 5,000 அல்லது 10,000 ஆயிரம் கூட மக்களை தேற்ற முடியாது.

ஆனால், நேற்று சனவரி26 அன்று விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய வெல்லும் சனநாயக மாநாடு இந்திய வரலாற்றில் மாநாடு என்றால் என்ன என்பதற்கு புதிய உரையை எழுதியிருக்கிறது. காலை முதலே மாநாட்டை நிரப்பிக்கொண்டிருந்தது மக்கள் கூட்டம். முதல் நாள் இரவே உணவு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். சேலம், தர்மபுரி பகுதிகளில் முழு மாட்டை விலைக்கு வாங்கி பிரியாணி தயாரித்து கொண்டு வந்திருந்தார்கள். கடந்த திசம்பர் 23 அன்று நடத்தவிருந்த மாநாடு மழை வெள்ளத்தால் சனவரி 26 க்கு மாற்றப்பட்டாலும், வாகனங்களை பிடிக்கும் பணி கூடுதலானது.
அவரவர்கள் தயாரித்துக் கொண்டு வந்த உணவை வாகனங்களில் ஏற்றி மதியம், இரவு என இரு வேளை சாப்பிட்டார்கள். மாலை 3 மணியிலிருந்தே திருச்சி நெடுஞ்சாலை சிறுத்தைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மரியாதைக்குரிய கே.எஸ்.அழகிரி அவர்களையும் காங்கிரஸ் பிரமுகர்களையும் அழைத்து வரும் பொறுப்பு எனக்கும் கட்சியின் தலைமை நிலையச்செயலாளர் திரு.தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களிடமும் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
SRM விடுதியிலிருந்து 3 மணிக்கு கிளம்பினோம். 7.30 மணிக்கு தான் மாநாட்டுக்குள் நுழைய முடிந்தது. வழிநெடுக சிறுத்தைகளும் வாகனங்களும் வழிகளை அடைத்துக்கொண்டு சனாதனம் ஒழிப்போம்! சனநாயகம் காப்போம்! என உணர்ச்சி பிழம்போடு முழக்கமிட்டு வந்தனர். அத்தனை பேருடைய உணர்வும் பாஜக எதிர்ப்பாகவே இருந்தது. மேடையும் அத்தகைய உணர்வை எதிரொலித்தது. ஏதோ மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவுக்கு மக்கள் கூட்டம் கள்ளழகரை தரிசிக்க வந்தது போல, எழுச்சித்தமிழரை தரிசிக்க வந்திருந்தனர். கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு வந்தனர்.
இந்த உணர்வுதான் மாநாட்டின் வெற்றி! இந்த உணர்வு தான் சங் பரிவாரக்கும்பலுக்கான எச்சரிக்கை! மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் தலைவர்களின் உரையும் இந்தியாவின் திசை வழிப்போக்கையே தீர்மானிக்கப்போகிறது. எழுச்சித்தமிழர் உரையும் முதல்வரின் உரையும் பாஜகவுக்கு முடிவுரை எழுதப்போகும் முகவுரையாக அமைந்தது.” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications