30 வருஷம் சிறை.. ஜெயிலில் இருந்த வீரப்பனின் கடைசி கூட்டாளி மாதையன் பெங்களூரில் உயிரிழப்பு!
சென்னை: வீரப்பனின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவராக அறியப்பட்ட மீசைக்கார மாதையன் என்பவர் இன்று உயிரிழந்தார்.
ஒரு காலத்தில் தமிழக, கர்நாடக வனப்பகுதியை அலறவிட்டவர் சந்தன கடத்தல் மன்னர் வீரப்பன். சந்தன மரம் கடத்தல் மட்டுமின்றி, யானைத் தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் எனப் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்.
வீரப்பன்: குறிப்பாகக் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை 108 நாள்கள் கடத்தி வைத்த நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியவர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநில வனத்துறைக்கும் சவால் கொடுத்து வந்தவர் வீரப்பன்.. இவர் மீது தமிழ்நாட்டில் 99 வழக்குகள், கர்நாடகாவில் 84 வழக்குகள் கேரளாவில் ஒரு வழக்கு என மொத்தம் 184 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் 2004 அக்டோபர் 18இல் தமிழ்நாடு அதிரடிப்படையினர் நடத்திய ஆபரேஷன் கக்கூனில் கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அப்படி வீரப்பனின் முக்கிய கூட்டாளியாக இருந்தவர், மீசைக்கார மாதையன் என்று அழைக்கப்பட்ட இவர், 1993ஆம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து தப்பி வந்து கர்நாடக போலீசில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து இவர் மீது நான்கு தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
மாதையன்: இதை எதிர்த்து அவர் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார். இருப்பினும், 9 ஆண்டுகளுக்குப் பின் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி கருணை தள்ளுபடி செய்தார். இருப்பினும், உரியக் காலத்தில் கருணை மனுவைப் பரிசீலனை செய்து முடிக்கவில்லை என்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கருணை மனு மீது ஒன்பது ஆண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருந்ததால் அவர் உட்பட 4 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு 2014 ஜனவரி மாதமே வந்துவிட்ட போதிலும், கர்நாடக அரசும் சிறைத்துறையும் மாதையன் உட்பட 4 பேரை விடுவிக்காமல் தொடர்ந்து சிறையிலேயே வைத்திருந்தது. அந்த நால்வரில் 2018இல் சைமன் என்பவரும், 2022இல் பிலவேந்திரன் என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். மற்றொரு குற்றவாளியான ஞானபிரகாசம் கடந்த பிப். மாதம் சிறுநீரக பிரச்சினையால் பரோல் மூலம் வெளியே வந்தார்.
உயிரிழப்பு: இதற்கிடையே கடந்த 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த மாதையனுக்கு உடல்நிலை மோசமானது. கடந்த 11ஆம் தேதி உடல்நிலை மோசமாகி அவர் நினைவிழந்தார். இதையடுத்து மைசூர் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காகப் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நினைவு திரும்பாமலே இன்று மாலை மாதையன் உயிரிழந்தார். வீரப்பன் கூட்டாளி என்று சிறையிலிருந்த கடைசி நபர் மீசைக்கார மாதையன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications