சென்னையில் 400 இடங்களில் வாகன சோதனை.. போலீஸ் உருவாக்கும் தீவிர கண்காணிப்பு வளையம்!
சென்னை: சென்னையில் 400 இடங்களில் வாகன சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக தடுப்புகள் அமைத்து தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு ; பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு.. எவை செயல்படும், எவை செயல்படாது?
நள்ளிரவு தொடங்கி அமல்
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு தொடங்கி அமலுக்கு வருகிறது.
சோதனை சாவடி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் மக்கள் தப்பித்தால் போதும் என்ற நினைப்பில் பலர் சென்னையை விட்டு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி செல்பவர்களை தடுப்பதற்காக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிரமாக சோதித்து வருகிறார்கள். இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் பகுதியிலும் தீவிரமாக சோதித்து வருகிறார்கள் இதேபோல் பெங்களூரு சாலை, தடா சாலையிலும், திருவள்ளூர் சாலையிலும் தீவிரமாக போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தற்காலிக சோதனைச்சாவடிகள்
இதனிடையே நாளை முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையில் 400 இடங்களில் தீவிரமாக சோதனை செய்ய முடிவு செய்துள்ளார்கள். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி நூறடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, போரூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை என 400 முக்கிய இடங்களை தேர்வு செய்து சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வித்தியாசமாக இருக்கும்
எனவே முந்தைய ஊரங்குகளை போல் சென்னையில் ஊரடங்கு இருக்காது . நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். சென்னையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வீடடின் அருகே உள்ள கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதையும் மீறி பைக், கார்களை எடுத்துக்கொண்டு வெளியில் சுற்ற நினைத்தால் உங்கள் மீது வழக்கு பாய்ந்துவிடும். அதாவது 144 தடை உத்தரவை மீறினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் சென்னையை விட்டு இபாஸ் இல்லாமல் யாரும் வெளியே செல்ல முடியாது. போலி இபாஸ் உடன் வெளியே செல்ல முயன்றால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.