ஓடிடியில் வெளியான ஜோதிகாவின் "சிஸ்டம்” எப்படி இருக்கு? கோர்ட்டில் தொடங்கும் கதை… கடைசியில் ஜெயித்ததா?
சென்னை: ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வந்தாலே ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் புதிய படங்களில் எதை பார்க்கலாம், எதை தவிர்க்கலாம் என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு வாரமும் நாம ஒரு படத்தை தேர்வு செய்து, அது உண்மையிலேயே பார்க்க வேண்டிய படமா இல்லையா என்று அலசிக் கொண்டு வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ஜோதிகா - சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள 'சிஸ்டம்' படத்தை பற்றி பார்க்கலாம்.
சமீப காலமாக கோர்ட்டு ரூம் த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நீதிமன்றம், வாதம், அதிகாரம், உண்மை, பொய், திடீர் திருப்பங்கள்-இவை எல்லாம் சரியாக அமைந்தால் படம் நிச்சயம் கவரும். அந்த மாதிரியான எதிர்பார்ப்போடுதான் 'சிஸ்டம்' வெளியாகியுள்ளது.

கதை என்ன?
கதையின் மையத்தில் இருப்பவர் நேஹா ராஜ்வன்ஷ் என்ற அரசு வழக்கறிஞர். பெரிய சட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பிரபல வழக்கறிஞர். அவருடைய சட்ட நிறுவனத்தில் சேர வேண்டும் என்ற ஆசை நேஹாவுக்கு இருக்கிறது. ஆனால் அதற்காக தொடர்ந்து 10 வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராக வேலை பார்க்கும் சாதாரண குடும்ப பெண்ணான சரிகா ராவத் (ஜோதிகா) வாழ்க்கையோ முற்றிலும் வேறு. குடும்ப பொறுப்புகள், பண சிக்கல்கள், வாழ்க்கை போராட்டம் இவை எல்லாவற்றையும் சமாளித்து வாழ்கிறார்.
இந்த இருவரின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைகிறது. நீதிக்காக போராடுகிறார்களா? இல்ல வெற்றிக்காக போராடுகிறார்களா? என்ற கேள்வியோடு கதை நகர்கிறது.
படத்தின் பிளஸ் என்ன?
இந்த படத்தின் பெரிய பலம் ஜோதிகா தான். அமைதியாக இருந்தாலும் திரையில் அவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. பெரிதாக ஓவர் டிராமா இல்லாமல் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
சோனாக்ஷி சின்ஹாவும் தனது கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறார். தந்தையின் அங்கீகாரத்திற்காக போராடும் பெண்ணின் மனநிலையை சரியாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

மைனஸ்?
கோர்ட்டு ரூம் படம் என்றாலே ரசிகர்கள் எதிர்பார்ப்பது விறுவிறுப்பான வாதங்கள். ஆனால் இதில் சில வழக்குகள் வேகமாக முடிந்துபோகும் உணர்வு வருகிறது. சில இடங்களில் இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாம் போல தோன்றுகிறது.
கடைசி திருப்பம் ஓகே என்றாலும், "வாவ்" என்று சொல்ல வைக்கும் அளவுக்கு அதிர்ச்சி இல்லை.

பார்க்கலாமா வேண்டாமா?
மாஸ் கோர்ட்டு சண்டை, பரபரப்பு த்ரில்லர் எதிர்பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கலாம். ஆனால் ஜோதிகாவுக்காகவும், பெண்களை மையமாக கொண்ட சமூக கருத்துள்ள டிராமாவாகவும் பார்க்கலாம்.
நம்ம வெள்ளிக்கிழமை verdict: ஒரு முறை குடும்பத்தோடு ஓடிடியில் பார்க்கக்கூடிய படம் - சிஸ்டம்.













Click it and Unblock the Notifications