வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்
சென்னை: சென்னைவாசிகளின் 18 வருட கனவான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் இணைப்பு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பிற்கு முதல் நாளில் சத்தமே இல்லாமல் மத்திய அரசு திறந்து வைத்தது.. வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் இணைப்பால் 80 நிமிடப்பயணம் வெறும் 15 நிமிடத்தில் சாத்தியம் ஆகி உள்ளது. கோட்டையை சுற்றி வந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் நேரம் குறைந்துள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதி மக்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக உள்ளது. இந்த திட்டம் குறித்து பாஜகவின் எஸ்ஜி சூர்யா தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதையை பரங்கிமலை வரை சுமார் 5 கி.மீ. தூரம் நீட்டிக்கும் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கியது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் பல ஆண்டு காலம் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னர் 2022-ம் ஆண்டு மீண்டும் தொடங்கியது. பணிகள் பல்வேறு சவால்களை கடந்து பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் முடிந்தது. இதையடுத்து வேளச்சேரி-பரங்கிமலை இடையே பயணிகள் ரயில் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து வேளச்சேரி-பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் மார்ச் 14ம் தேதி முதல் ரயில் சேவைகள் தொடங்கின.

பரங்கிமலையில் இறங்கி வேளச்சேரி செல்லும் ரயில் மூலம் மயிலாப்பூருக்கு ஈஸியாக இனி மக்கள் போக முடிகிறது.. அதேபோல் மயிலாப்பூர், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம்பரம் செல்வதற்கு வேளச்சேரி-பரங்கிமலை சென்று அங்கிருந்து தாம்பரத்துக்குச் சென்று விரைவு ரயில்களை பிடிக்க முடிகிறது.
அதேபோல் வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடம் வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், இனி வேளச்சேரி கடைசி ரயில் நிலையமாக இல்லை... கடைசி ரயில் நிலையமாக பரங்கிமலை இருக்கிறது. கடற்கரை வேளச்சேரி ரயில்கள் பரங்கிமலை வரை சென்று வருகிறார்கள். 43 ரயில்கள் கடற்கரையிலிருந்து வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரங்கிமலையிலிருந்து 43 ரயில்கள் கடற்கரைக்குத் திரும்புகிறது. எனவே நீங்கள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பரங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடிகிறது. அதேபோல் வழக்கம் போல கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை மட்டுமே இரண்டு ரயில்கள் சென்று வருகிறது. இவை பரங்கிமலை வரை செல்வது இல்லை... வேளச்சேரியுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும். இது போன்ற 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் 3 ஜோடி ரயில்கள் 'ஷட்டில்' சேவைகள் ரயில்களாக இயக்கப்படுகிறது. இந்த 3 ரயில்கள் கடற்கரை வரை செல்லாமல், வெறும் வேளச்சேரி மற்றும் பரங்கிமலை ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையே மட்டும் முன்னும் பின்னுமாக இயக்கப்படுகிறது.. இந்த ரயில் சேவை ஒட்டுமொத்த சென்னை மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. வடபழனி அல்லது சென்னையின் எந்த பகுதியில் இருந்தும் பரங்கிமலைக்கு ரயில் மூலமாக வந்து மின்சார ரயில் மூலம் திருவான்மியூர், அடையாறு, தரமணி, வேளச்சேரி, பெருங்குடி போன்ற ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிக்கு மக்கள் போக முடிகிறது.
அதேபோல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, திருவான்மியூர் மக்கள் தாம்பரம், செங்கல்பட்டு செல்வது எளிதாகி உள்ளது. இந்த திட்டம் குறித்து பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி தலைவர் எஸ்ஜி சூர்யா தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் வேளச்சேரியில் இறந்து பறக்கும் ரயிலில் ஏறி கோட்டைக்கு வந்தார். அங்கு வந்து சேர 40 நிமிடம் ஆனது. அதன்பிறகு அடுத்த ரயிலில் ஏறினார். அந்த ரயிலில் ஏறியதில் இருந்து 40 நிமிடத்தில் பரங்கிமலைக்கு ரயில் வந்தது. ஒட்டுமொத்தமாக 80 நிமிடம் ஆனது. அடுத்ததாக பரங்கிமலையில் இருந்து வேளச்சேரிக்கு ரயிலில் சென்றார். அதற்கு வெறும் 15 நிமிடங்களே ஆனது. பொதுவாக வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை செல்ல ரேபிடோ அல்லது காரில் 150 முதல் 200 ரூபாய் கேட்கிறார்கள். ஆனால் வெறும் 5 ரூபாயில் பரங்கிமலைக்கு போய்விட முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஆண்டுகளாக முடங்கிகிடந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளதால், தற்போது ஐடி ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது" என்று எஸ்ஜி சூர்யா கூறினார்.












Click it and Unblock the Notifications