அறிவுக் கூர்மையுள்ள அதிகாரிகளை நியமிக்கவும்... அரசுக்கு வேல்முருகன் கூறும் யோசனை..!
சென்னை: ஏரிகளிலும், அணைகளிலும் வேகமாக நீர் நிரம்பிவருவதால் சீராக அதனை கையாளக் கூடிய அறிவுக்கூர்மையான அதிகாரிகளை பணி நியமிக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மேலும், தமிழகத்திற்கு தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாராட்டு
சென்னை மாநகரத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டதோடு, நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்தி வருவது வரவேற்கதக்கது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, நோய்த் தடுப்பு முகாம்களை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

பெரிய இழப்பு
இது ஒருபுறமிருக்க, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசு, தானே, நீலம், மடி புயல், நாடா, வர்தா, ஒகி, கஜா ஆகிய புயல்களை சந்தித்துள்ளது. இந்த புயல் காலங்களில், சென்னை மாநகரம் பெரும் பேரழிவு வெள்ளத்தில் சிக்கியது. அந்த பேரழிவில் இருந்து தக்க பாடத்தை கற்றுக்கொண்டு, சென்னையை சிறந்த ஒரு மாநகரமாக கடந்த அதிமுக அரசு கட்டமைத்திருக்க வேண்டும். குறிப்பாக, 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், சென்னை மாநகரம் சந்தித்த இழப்பும், உயிர் பலியும் அதிகம்.

அதிமுக ஆட்சி
அதற்கு பிறகாகவது, சென்னையை சீரமைப்பதற்காக நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியான எந்தவொரு திட்டமிடலும், முன்னேற்றமும் இல்லாததால் தான், சென்னை மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது. 2015 வெள்ளத்திற்கு பிறகு, சென்னையில் வெள்ளத்தை தடுக்க ரூ.2400 கோடி திட்டம் அறிவித்தீர்களே என்ன ஆயிற்று. அந்த நிதியும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டு அதிமுக ஆட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதும் நியாயமானதே.

மராமத்து பணி
மராமத்து பணிகளுக்காக ரூ.5000 கோடியை ஓதுக்கீடு செய்ததாக கூறிய கடந்த அதிமுக அரசு, ஏரிகளை முறையாக தூர்வாரியதா?. நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றியதா?. வடிகால் வாரிய மேம்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை செயல்படுத்தியதா என்றால் பதில் இருக்காது. எனவே அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க விசாரணை குழு அமைப்பதாக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பது வரவேற்தக்கது.

அறிவுக்கூர்மை
அடைமழை அதிகரித்து ஏரிகளில் வெள்ளம் வேகமாக நிரம்பி வருவதை உணர்ந்து, சீராகத் தண்ணீரை முன்கூட்டியே வெளியேற்றிவிடும் அறிவுக் கூர்மையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.












Click it and Unblock the Notifications