ஆசையை தூண்டும் ஆன்லைன் சூதாட்டம்; அரசு ஆப்பு வைக்க வேண்டும்; வேல்முருகன் வேண்டுகோள்!
சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு லட்சக்கணக்கானோர் அடிமையாகி உள்ளதாகவும் இதனால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சூதாட்டம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு லட்சக்கணக்கானோர் அடிமையாகி உள்ள நிலையில், அச்சூதாட்டத்தில் பணத்தை இழந்த மாணவர்கள், இளைஞர்கள், பணியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது.

தவறான பாதை
இந்த தொடர்ச்சியின் விளைவாக, சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் முருகன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதோடு, அடுத்த தலைமுறையினரையும் தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுவோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அதிமுக அரசு
மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் ஆசையை தூண்டி, அவர்களிடத்தில் பணத்தை பறித்து ஏமாற்றி வரும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் விடுத்த அடிப்படையில், கடந்த அதிமுக அரசு அவசர அவரசமாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

நீதிமன்றம்
குறிப்பாக, இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களையும், உரிய கருத்துக்களை ஆணித்தரமாகவும் சட்டம் நிறைவேற்றும் போது அதிமுக அரசு தரப்பில் கூறவில்லை. அதனால், அச்சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்கொலைகள்
இதன் விளைவாக தான், தாம்பரத்தில் கிஷோர், விழுப்புரத்தில் பச்சையப்பன் ஆகிய இளைஞர்களின் தற்கொலை, சென்னை சேப்பாக்கம் விருந்திரனர் மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளம் காவலர் வேலுச்சாமியின் தற்கொலை முயற்சி ஆகிய நிகழ்வுகள் அரங்கேறியது. இதன் தொடர்ச்சியாக, சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் முருகன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வலியுறுத்தல்
எனவே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொடுந்துயரங்கள் நடக்காத வகையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.












Click it and Unblock the Notifications