நெஞ்சு பொறுக்கவில்லை; இனிமேலாவது இதை செய்யுங்க; அரசுக்கு வேல்முருகன் வேதனை பதிவு!
சென்னை: பள்ளிகளில் தொடரும் மாணவிகளுக்கான பாலியல் சீண்டல்கள் தனக்கு பேரதிர்ச்சியையும், துயரத்தையும் தருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான வேல்முருகனின் வேதனைப் பதிவு பின்வருமாறு;

பேரதிர்ச்சி
பத்மா சேசாத்திரி, சின்மயி, கேந்திர வித்யாலயா போன்ற தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. சின்மயி பள்ளியில் ஆசிரியரின் பாலியல் தொல்லைக்காரணமாக, 11ஆம் வகுப்பு மாணவி பொன்தாரணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. அச்சோக நிகழ்வின் வடு மறைவதற்குள்ளாக, கரூரில் பாலியல் வன்கொடுமை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பேரதிர்ச்சியும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது.

மன உளைச்சல்
அம்மாணவி தற்கொலை செய்துள்ள கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்றும் தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் வாயிலாக அம்மாணவியின் பாதிப்பையும், மன உளைச்சலையும் நம்மால் உணர முடிகிறது.

பாலியல் சீண்டல்
எனவே, பள்ளிகளில் மாணவிகளுக்கான பாலியல் சீண்டல்களை அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களை வளர்த்தெடுப்பதில், நல்வழிப்படுத்துவதில் கூடுதல் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர் பணியின் உயர்ந்த விழுமியங்களை ஆசிரியர்கள் உணர வேண்டும். மாணவர்களின் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மாணவர்கள், காவல்துறையினரை எளிதாக அணுக முடியும் என்ற நிலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எடுத்துரைக்கிறது.

சட்டங்களை கடுமையாக்குக
இது ஒருபுறமிருக்க, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது நாட்டிற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களான போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.












Click it and Unblock the Notifications