உயிருடன் சம்பந்தப்பட்ட விவகாரம்; அதனால் அலட்சியம் வேண்டாம்; அலர்ட் கொடுக்கும் வேல்முருகன்!
சென்னை: மழையால் ஆங்காங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிடங்கள் இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக அரசை அலர்ட் செய்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
கடந்த அதிமுக ஆட்சியில், கட்டப்பட்ட பள்ளிகளின் வகுப்பறைகள் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பள்ளிகள் எண்ணிக்கை
தமிழ்நாட்டில், 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 அரசுப்பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளை பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5089, நடுநிலைப் பள்ளிகள் 763, உயர்நிலைப் பள்ளிகள் 2046, மேல்நிலைப் பள்ளிகள் 3764 உட்பட மொத்தம் 12,382 பள்ளிகள் உள்ளன.

தனியார் பள்ளிகள்
அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5021, நடுநிலைப் பள்ளிகள் 1508, உயர்நிலைப் பள்ளிகள் 589, மேல்நிலைப் பள்ளிகள் 1210 உட்பட மொத்தம் 8328 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் செயற்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, மருத்துவ கல்லூரி என ஏராளமான கல்லூரிகள் செயற்பட்டு வருகின்றன.

மோசமான நிலை
இக்கல்லூரிகளில் உள்ள சில கல்லூரிகள் பழமையானது என்பதோடு, அக்கல்லூரிகளின் கட்டடங்களில் பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து விழுவதும், சேதமடைவதும் நடந்து வருகிறது.

வேண்டுகோள்
எனவே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பழுதான பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பட்டியலிட்டு, அவற்றை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

முன் வர வேண்டும்
கடந்த அதிமுக ஆட்சியில், கட்டப்பட்ட பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்புகார் குறித்து ஆய்வு செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications