Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன?
மும்பை: டாடா அறக்கட்டளைகளுக்குள் (Tata Trusts) மோதல் முற்றியுள்ள நிலையில், அதன் முக்கிய பொறுப்பில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசன் ஒரு குறிப்பிட்ட அறக்கட்டளையிலிருந்து விலகியுள்ளார்.
டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் 'ஹிராபாய் டாடா அறக்கட்டளை'யில் (Hirabai Tata Trust) வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் அந்தப் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள் என்று கூறி, முன்னாள் அறங்காவலரான மெஹ்லி மிஸ்ட்ரி என்பவர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

மெஹ்லி மிஸ்ட்ரி தனது புகாரில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்:
மத விதிமுறை: அந்த அறக்கட்டளையின் விதிகளின்படி, அதன் பொறுப்பாளர்கள் 'பார்சி-ஜோராஸ்ட்ரியன்' மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், மும்பை பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதி இல்லை: வேணு சீனிவாசனும், விஜய் சிங்கும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால், அவர்களைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே வேணு சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தான் விலகியதற்கு "வேலைப்பளு" தான் காரணம் என்று வேணு சீனிவாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் தனது சொந்த நிறுவனமான 'சுந்தரம் க்ளேட்டன்' தலைவராகப் பொறுப்பேற்றதால், மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அறங்காவலர் மெஹ்லி மிஸ்ட்ரி சும்மா இருக்கவில்லை. அவர் வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் மீது நிதி முறைகேடு, நிர்வாகச் சீர்கேடு போன்ற கடுமையான புகார்களையும் அடுக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த 'ஹிராபாய் அறக்கட்டளை' என்பது டாடா குழுமத்தின் மிக முக்கியமான நிதி ஆதாரங்களைக் கையாளும் ஒரு அமைப்பாகும். இதில் நடக்கும் மோதல்கள் ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் நிர்வாகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.
தற்போது இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட யாரும் அதிகாரப்பூர்வமாகப் பதில் அளிக்கவில்லை.
வேணு சீனிவாசன் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் மற்றும் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor Company) குழுமத்தின் கௌரவத் தலைவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், தனது சிறந்த நிர்வாகத்தால் டிவிஎஸ் நிறுவனத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தியவர். இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளது. தொழில் மட்டுமின்றி, டாடா அறக்கட்டளைகளின் (Tata Trusts) துணைத் தலைவராகவும் பணியாற்றி, சமூக நலப்பணிகளில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications