சென்னையில் மிக குறைந்த அளவில் இயங்கும் பேருந்துகள்.! கடும் கூட்ட நெரிசலில் சிக்கிய மக்கள்
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தலைநகர் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. போராட்டம் காரணமாக மிக குறைவான எண்ணிக்கையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஜூன் மாத சம்பளம் முழுமையாக வழங்காததை கண்டித்து, சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் சென்னையில் உள்ள கிண்டி, தாம்பரம், பிராட்வே, அம்பத்தூர், அடையாறு, தி.நகர், வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, சென்னையில் பெரும்பான்மையான மாநகர பேருந்துகள் ஓடவில்லை. இந்த திடீர் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல், பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை என்பதால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் கடும் அவதியடைந்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை நகரில் காலை நேரத்தில் இயக்கப்பட வேண்டிய சுமார் 500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது பீக் அவர் என்னும் நிலையில் சுமார் 2,000 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அண்ணாநகர், அம்பத்தூர், அடையாறு, கிண்டி, தி.நகர் பணிமனைகளில் இருந்து மிகக்குறைவான எண்ணிக்கையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோர் மிகுந்த கூட்ட நெரிசலில் சிக்கி, கடும் சிரமத்தில் பயணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications