சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றி.. தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி.. சைதை துரைசாமி அறிவிப்பு
சென்னை: இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. 45 வயதாகும் வெற்றி துரைசாமி தனது தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார். பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான 'என்றாவது ஒருநாள்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வெற்றி தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபிநாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். சென்னை திரும்புவதற்காக இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அருகே மலைப்பாங்கான பகுதியில் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இரு தினங்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
உள்ளூரை சேர்ந்த வாடகை காரை தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார். கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார். காரில் பயணம் செய்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்.
காரில் சீட் பெல்ட் அணிந்திருந்த டிரைவரும், கோபிநாத்தும் காருடன் இருந்த இருந்த நிலையில் சீட் பெல்ட் அணியாத வெற்றி துரைசாமி,
கார் ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வந்தனர்.
சட்லஜ் நதி, பக்ரா நங்கல் அணையில் வெற்றி துரைசாமியை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்புபணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெற்றி துரைசாமி குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தகவல் அறிய இரண்டு நாட்களாகும் என்றும் இமாச்சலபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். மகன் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்த உடன் சைதை துரைசாமி உடனடியாக இமாச்சல பிரதேசத்திற்கு சென்று காத்திருக்கிறார். விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட ரத்தக்கரை உள்ளிட்டவற்றை கொண்டு பரிசோதனை நடந்து வருகிறது. மேலும் சட்லெஜ் ஆற்றங்கரையில் உள்ள மக்கள் உதவி உடன் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கார் கவிழ்ந்த விபத்தில் சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ஒரு கோடி ரூபாய் சன்மானம் குறித்த தகவலையும் மகனின் புகைப்படத்தை காண்பித்து சட்லெஜ் நதிக்கரையோரம் வசிக்கும் பழங்குடி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்குமாறும் சைதை துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications