முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு எதிரே தீக்குளித்த நபர் ஒருவார சிகிச்சைக்கு பிறகு உயிரிழப்பு.. சோகம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு எதிரே தீக்குளித்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிமாறன், ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் தென்காசி, நெல்லை மாவட்டங்களும் உண்டு.

வீட்டு வரி பாக்கி
தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியம், ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, இந்த முறை பட்டியல் இன சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு, அதே ஊரைச் சேர்ந்த வெற்றிமாறன் (48) இவரது மனைவி சபரியம்மாள் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், வீட்டு வரி பாக்கி இருப்பதை காரணமாக கூறி, இவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தீக்குளிப்பு
இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார் வெற்றிமாறன். கடந்த மாதம் 26ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, முதல்வர் ஸ்டாலின் வீடு முன், 'டர்பன்டைன்' என்ற திரவத்தை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார் வெற்றிமாறன்.

காப்பாற்றிய போலீசார்
இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் லலிதா, சிறப்பு எஸ்.ஐ. ரமேஷ்பாபு, போலீசார் கோபிநாத், ராஜசேகர், முனுசாமி, கார்த்திக் ஆகியோர், சமயோஜிதமாக யோசித்து, வெற்றிமாறனின் தலையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், போலீசார் கவனிக்கும் முன்பாகவே, வெற்றிமாறன் உடலில் 55 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டன. எனவே மிகவும் ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

டிஜிபி வாழ்த்து
தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வெற்றிமாறனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோரை, டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டினார். மேலும்,சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று, வெற்றிமாறனிடம் நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இருப்பினும், சிகிச்சை பலன்றி, வெற்றிமாறன் இன்று மாலை உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் வீட்டுக்கு எதிரே
இதனிடையே, நடிகர் அஜீத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை ஈஞ்சம்பாக்கம், அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பர்சானா என்ற பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார்.

காரணம்
இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது வீடியோ எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றார் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications