வழக்கறிஞர்கள் எதிர்ப்புகளுக்கு நடுவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி இன்று பதவியேற்றார்.
சென்னை: வழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி இன்று பதவியேற்றார். முன்னதாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி செயலாளராக இருந்தவர் விக்டோரியா கவுரி. பல்வேறு சர்ச்சைகளுக்குரிய கருத்துகளைத் தெரிவித்தவர் என்ற குற்றச்சாட்டு விக்டோரியா கவுரி மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்தது. இதனை ஏற்று மத்திய அரசும் ஆணை பிறப்பித்தது.

முன்னதாக விக்டோரியா கவுரி, சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்; அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் 21 மூத்த வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக கொலிஜியத்துக்கு மனு கொடுக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது மத்திய அரசு.
விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு ந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் பெஞ்ச் முன்பாக இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, வெறுப்பு பேச்சுகளுக்காக விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்க கூடாது என வாதிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமோ, விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுத்து மனுவை டிஸ்மிஸ் செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விக்டோரியா கவுரியுடன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட மேலும் 4 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக்கொண்டானர். அவர்களுக்கும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி ஏற்பு உறுதி மொழி செய்துவைத்தார். கடந்த மாதம் 17-ந் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்பது பேரை நியமிக்க மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும்,
வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், ஜான் சத்தியன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஆறு வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி ஏற்பு உறுதி மொழி செய்துவைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும். தற்போது கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு மூலமாக நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 18 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications