கொடி பிடிச்சது இவரா இருக்கலாம்... ஆனால் முதல்ல விதை போட்டது.. "அவர்"தான்.. மறக்க முடியுமா??!
அதிமுகவின் தற்போதைய சந்தோஷத்துக்கு காரணமே முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ்தான்
சென்னை: எல்லாமே ஒரு சுபயோக சுப நிமிடத்தில்தான் ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். சிலருக்கு சறுக்கலில் ஆரம்பிக்கும்.. சிலருக்கு சர்ருன்னு தூக்கி விடும்.
துணை முதல்வர் ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் அன்பையும் மதிப்பையும் பாசத்தையும் பெற்றவர் என்பதை விட, சொல்வதைச் செய்பவர், சொன்னபடி செய்பவர், நம்பிக் கொடுக்கலாம், நம்பிக்கையோட இருக்கலாம் என்ற அந்த நம்பிக்கைதான் அதிகம்.
ஆனால் ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு படு வேகமாக சரிந்தது. இன்று வரை அவரால் கட்சியை தன் வயப்படுத்த முடியவில்லை. அது துரதிர்ஷ்டவசமானதுதான். ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு இறங்கியதுமே இபிஎஸ்ஸின் கிராப் மெல்ல உயரத் தொடங்கியது. ஆரம்பத்தில் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அசத்தும் திருச்சி போலீஸ்.. புகார் அளித்தால்.. விசாரிக்கும் நடைமுறையில் புதிய மாற்றம்
இபிஎஸ் லாபி
எல்லோருடைய கவனமும் சசிகலா பக்கம் திரும்பியிருந்த சமயத்தில்தான் சத்தம் போடாமல் "இபிஎஸ் லாபி" வலுவடையத் தொடங்கியிருந்தது. நிச்சயம் இதை சசிகலா கூட உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சத்தம் போடாமல் அணி திரண்ட கொங்கு லாபி, சசிகலாவுக்கு எதிரான நிலை ஏற்பட்டதுமே டக்கென லைம்லைட்டுக்குள் தாவி வந்தது.
கொங்கு மண்டலம்
நம்மை முன்நிறுத்தினால் வாய்ப்பு வராமல் போய் விடுமோ என்ற பயத்தில் கொங்கு மண்டலத்தின் மூத்த தலைவர்கள் இபிஎஸ்ஸை உள்ளே செருகி விட்டனர். அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். காரணம், இபிஎஸ் மீது எந்த கெட்ட பெயரும் கிடையாது. அன்பானவர், அமைதியானவர், அடக்கமானவர், அருமையானவர் என்று ஏகப்பட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரராக வலம் வந்து கொண்டிருந்தவர் இபிஎஸ். எனவே அவரை தூக்கி முன்னாடி விட்டனர்.
பதவி
முன்னுக்கு வந்த அதே வேகத்தில் ஜம்மென்று ஒரு ஜம்ப்படித்து பதவியில் அழகாக உட்கார்ந்து விட்டார் இபிஎஸ். பிறகென்ன இந்த செய்தியை எழுதும் இந்த நொடி வரை இபிஎஸ்ஸின் கிராப் உயர்ந்தபடிதான் உள்ளது. அவருக்கான கொங்கு மண்டல லாபி வலுவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் மட்டும் அவர் இந்தப் பதவியில் நீடிக்கிறார் என்று கூறி விட முடியாது.. மேலும் பற்பல காரணங்கள் அதற்கு இருக்கலாம்.
வித்யாசாகர் ராவ்
ஆனால் இபிஎஸ்ஸும் - ஓபிஎஸ்ஸும் இணைந்து கை கோர்த்த அந்த நிமிடம் முதல் ஆட்சியை அழகாக கொண்டு சென்று வருகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எல்லாம் அந்த "வித்யாசாகர் ராவ்" ஆரம்பித்து வைத்தது.. அதாங்க முன்னாள் தற்காலிக ஆளுநர். அவர்தான் இருவரையும் கையைப் பிடித்து இழுத்து, "வாங்க வந்து சேருங்க.. சேர்ந்து செயல்படுங்க" என்று சேர்த்து வைத்து விட்டுப் போனார். அவர் பார்த்து வைத்து விட்டுப் போன வேலைதான் இன்று வரை ஒர்க் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது.
ஸ்ருதி பேதம்
இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைவதற்கு முன்பு இடையில் இருந்தது சசிகலா என்ற "ஸ்ருதி பேதம்". அந்த ஸ்ருதி பேதம் எழுந்த வேகத்திலேயே காணாமல் போய் கரைந்தும் போனது காலத்தின் கட்டாயமா அல்லது போட்ட "ஸ்கெட்ச்" அப்படியா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அந்த ஸ்ருதி பேதம் மறைந்த நிமிடத்திலிருந்துதான் இபிஎஸ் ஓபிஎஸ் இணைப்பு சாத்தியமாயிற்று.
பிரதமர் மோடி
இணைந்த பிணைப்புக்கு இடை இடையே சிற்சில சலசலப்புகள் வந்தாலும் கூட யாராலும் இந்த இணைப்பை உடைக்க முடியவில்லை. எத்தனையோ பேர் முயன்று கூட பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை. பிரதமர் மோடியே கூட இந்த பிணைப்பைப் பார்த்து மகிழ்ந்தார். அவரது ஆசியும் கூட இந்த இணைப்பு பலமாக "பாம்பன் பாலம்" போல சிறந்து விளங்க ஒரு முக்கியக் காரணம்.. மறக்கக் கூடாது!
குழப்பம்
திடீரென நாளையே சசிகலா வந்தாலும் கூட அதிமுகவில் ஏதாவது குழப்பம் வருமா என்று கேட்டால் நிச்சயம் வராது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் இங்கே எல்லோருமே பதவி, அதிகாரம் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் நடமாடிகொண்டுள்ளனர். யாருக்கும் கொள்கை என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்டால் சந்தேகம்தாான். எனவே சசிகலாவே வெளியில் வந்தாலும் கூட யாரும் உடனே அவரிடம் ஓடி விட மாட்டார்கள். மாறாக எடப்பாடியாரின் அன்புப் பிடியில்தான் இருப்பார்கள்.
எடப்பாடியார்
காரணம் கொங்கு மண்டலத்தை கச்சிதமாக தனது பாக்கெட்டில் பதுக்கி வைத்திருக்கிறார் எடப்பாடியார். அவர்களுக்கும் இவரை விட்டு விட்டால் மீண்டும் முதல்வர் பதவியில் தங்களது மண்டலத்திலிருந்து யாரையும் போட வாய்ப்பே கிடையாது என்று நன்கு தெரிந்திருப்பதால் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த "ஒன்றும் ஒன்றும் 2" என்ற "ஆடிட்டிங்" கணக்கால்தான் எடப்பாடியார் ஏக போகமாக ஆட்சியில் நீடித்து கொண்டிருக்கிறார். அதனால், சசிகலா வந்தாலும் சரி , ஏன் "ஜெயலலிதாவே திரும்ப வந்தாலும் சரி" எடப்பாடியார் ஆட்சியை அசைக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். கருணாஸ் கூட பகிரங்கமாக சசிகலா பக்கம் போக மாட்டார் என்பதுதான் உண்மை.!
ஒரிஜினல் வழிகாட்டு குழு
ஆக.. இப்படி ஆரம்பத்திலிருந்தே அப்படியும் இப்படியுமாக போய்க் கொண்டிருந்தாலும்.. அப்பப்ப தலையிட்டு அன்பாக சொல்லியும், தலையில் குட்டியும் வழி நடத்தி வரும் அந்த "ஒரிஜினல் வழி காட்டும் குழு"வுக்குத்தான் அதிமுகவினர் நன்றி சொல்ல வேண்டும்.
பஞ்சாயத்து
இப்போது போடப்பட்டுள்ள 11 பேர் கொண்ட குழுவெல்லாம் இபிஎஸ் ஓபிஎஸ் பிரச்சினையைத் தீர்க்கத்தான்.. ஒரிஜினலான வழிகாட்டுக் குழு டெல்லியில்தான் உள்ளது... அவர்கள்தான் அழகாக அதிமுகவை வழி நடத்திக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு ஒரு பஞ்சாயத்துக்கு முடிவு கட்டியுள்ளனர்.. அடுத்தடுத்து மற்ற பஞ்சாயத்துக்களும் சுபமாக முடிவுக்கு வரும் என்று நம்பலாம்.!