4ம் தர அரசியல்வாதி போல்.. மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அரசியல் செய்கிறார் விஜய்.. கேபி முனுசாமி!
சென்னை: முதல்வர் விஜய் செய்வது மாற்று அரசியலா? மனசாட்சியை அடகு வைத்துவிட்டு செய்யும் அரசியலா? என்று அதிமுக நிர்வாகி கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். நான்காம் தர அரசியல்வாதி போல் செயல்படும் நீங்களா தூயசக்தி என்றும் கொந்தளித்துள்ளார்.
அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. சட்டசபையில் நடந்த தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவின் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏ-க்கள் எதிராக வாக்களித்தனர்.

அதிமுகவில் பிளவு
நேற்று மாலை தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த நிர்வாகிகளை கட்சிப் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன்பின் சிவி சண்முகம் தரப்பில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
கேபி முனுசாமி அறிக்கை
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களான ஆர்பி உதயகுமார், கேபி முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இப்படியான சூழலில் கேபி முனுசாமி முதல்வர் விஜய்யை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது நடைபெற்று வரும் சில சம்பவங்கள் ஒட்டுமொத்த அதிமுக கட்சியை சேர்ந்தவர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது.
ஒரு சிலர் கழகத்தின் தலைமை எடுத்த முடிவிற்கு எதிராக, ஆளும் கட்சியின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்படி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக கையெழுத்து போட்டதையும் மறக்கும் அளவுக்கு பதவி ஆசை சிலருக்கு முற்றிவிட்டதா?
சிவி சண்முகம் சொன்ன பொய்
இவர்கள் கூறும் பேச்சுக்கே வந்தால், திமுக ஆதரவோடு அமையும் ஆட்சிக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்களா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சராகவும், இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகவும் ஆக்க திமுக ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு இவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருக்கின்றனர்.
இது மட்டும் திமுகஆதரவு கிடையாதா? இதையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் தான் திமுக பக்கம் பேசினார்களா? என்ற சந்தேகம் வருகின்றது. மேலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆனதற்கே இவர்கள் தான் காரணம் என்பது போல பேசுகின்றனர். அவர் இந்த இயக்க பொறுப்பை ஏற்றதற்கு பின்னால் ஒவ்வொரு தொண்டர்களின் உழைப்பும் உள்ளது.
பதவி என்னும் துண்டுக்கு ஆசை
வெற்றி எல்லோருக்கும் தோல்வி எனக்கானது என சொல்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் தோல்வியடைந்த சோகம் காய்வதற்குள், இயக்கத்தை பிரித்து ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படும் இவர்களிடம் என்ன பேசுவது ? பதவிக்கு வரத்தான் அரசியல் செய்வதாக இவர்கள் கூறுகின்றனர். பதவி எனவும் தோளில் போடும் துண்டுக்கு ஆசைப்பட்டு கழகம் என்றும் வேட்டியை கழட்டி விடாதீர்கள்.
இவர்கள் இப்படி என்றால், இவர்களை ஆசைவார்த்தை காட்டி மயக்கி இருக்கும் முதலமைச்சரை நான் பார்த்து கேட்கின்றேன், இதுதான் மாற்று அரசியலா ? இல்லை மனசாட்சியை அடகு வைக்கும் அரசியலா ?கரூர் சம்பவத்தின் பொது சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி தான். அவர் மட்டும் குரல் கொடுக்கவில்லை என்றால் திமுக அரசு உங்களின் பொதுவாழ்க்கைக்கு முடிவு கட்டியிருப்பார்கள்.
4ம் தர அரசியல்வாதி
உங்கள் மனசாட்சிக்கு இந்த உண்மை தெரியும் என நம்புகின்றேன். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் எங்கள் கட்சியினரை விலைக்கு வாங்கி குதிரை பேரம் பேசி அவர்களை இழுத்துவிட்டீர்கள். நான்காம் தர அரசியல்வாதிபோல் செயல்படும் நீங்களா தூய சக்தி? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications