தவெகவுடன் சேர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு பவர் கிடைக்கும்.. மகன் விஜய்க்காக பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர்!
திருவாரூர்: ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் சொல்வதை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும் என்று நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருவதாக விமர்சித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யுடன் கூட்டணிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு பவர் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக - காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் நிறைவு அடையவில்லை. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஒரு சிலர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை என்றால், விஜய்யுடன் செல்வோம் என்றும் பேசினர்.
இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தார். அதேபோல் கரூர் விவகாரத்தின் போது விஜய்யுடன் ராகுல் காந்தியும் பேசி இருந்தார். அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாகவே தவெக நிர்வாகிகள் பலரும் தவெக - காங்கிரஸ் கூட்டணி இயற்கையான கூட்டணி என்று பேசி வந்தனர். ஆனால் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று முடிவு எடுத்தனர். தமிழ்நாட்டில் மற்ற எந்தக் கட்சிகளும் தவெக கூட்டணியில் இணையவில்லை. இதனால் விஜய்யும் தனித்து களம் காண்போம் என்பதை நிர்வாகிகள் மத்தியில் சூசகமாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு கருத்தை பேசியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், தவெகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தேய்ந்து போய் இருக்கிறது. காரணம் என்ன? ஏனென்றால் பவர் இல்லை.
ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து ஆதரவு கொடுத்து காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டே செல்கிறது. அந்தவொரு பவரை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறோம். அந்த பவருக்கு வந்தால், காங்கிரஸ் கட்சியால் வரலாற்றை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சி தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறிய போதும், எந்தக் கட்சியும் சீண்டவில்லை. இதனால் தனது மகன் தேர்தல் களத்தில் தனித்துபோய்விடக் கூடாது என்ற நோக்கில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருவதாகவும் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
தெறி படம் வரை விஜய்க்கான கதைகளையும், தயாரிப்பாளர்களையும் முடிவு செய்தது எஸ்.ஏ.சந்திரசேகர் தான். அதன்பின் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் விஜய் பெயரில் கட்சி தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தற்போது தயாரிப்பாளர்களை முடிவு செய்ததை போல், அரசியலில் கூட்டணியையும் முடிவு செய்ய எஸ்ஏசி முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications