கழுத்தை அறுத்த எடப்பாடி வேட்பாளர்? டிவி சின்னத்துக்கு ஓட்டு போடுங்க! திடீரென முடிவை மாற்றிய விஜய்!
சென்னை: எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட வேண்டிய வேட்பாளர் மாயமான விவகாரம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஏற்பட்ட இந்த சம்பவம், கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியது. இந்நிலையில், வரும் ஏப்.23 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தொண்டர்கள், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எடப்பாடி தொகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம், அக்கட்சி தொண்டர்களை கடும் அதிருப்தியில் தள்ளியது.

அந்த தொகுதியில் தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, அவரை திடீரென தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மாயமானதாக கூறப்படுகிறது.
எடப்பாடி தொகுதி
இந்த தொகுதியில் முக்கியமான போட்டியாளராக எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் களம் காண்கிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் காசி, நாம் தமிழர் கட்சி சார்பில் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் தவெக சார்பில் போட்டியிட இருந்த அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யா ஆகியோரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தவெக வேட்பாளர்
மனு நிராகரிக்கப்பட்டதும், அருண்குமார் தேர்தல் அலுவலகத்திலிருந்து வெளியேறியதாகவும், அதன் பின்னர் அவரது கைபேசி அணைக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் கிடைக்காததால், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த சம்பவத்துக்குப் பிறகு, அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது மிரட்டியிருக்கலாம் என்ற சந்தேகங்களையும் சிலர் முன்வைத்தனர்.
தொண்டர்கள் அதிருப்தி
இதையடுத்து, தேர்தல் அலுவலர் அலுவலகம் முன்பு திரண்ட தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காவல்துறையினருடன் வாக்குவாதமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால், கட்சித் தொண்டர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
'NOTA' சின்னம்
அதன்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த தொகுதியில் கட்சி சார்பில் வேட்பாளர் இல்லாத சூழலில், வரவிருக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் 'NOTA' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் ஏப்.23 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தொண்டர்கள், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விஜய் அறிவிப்பு
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுயேட்சைக்கு ஆதரவு
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனதளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்." என கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications