Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத ஒரு சிறப்பு பெரம்பூர் தொகுதிக்கு உள்ளது என்பதையும் அங்கே உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சமூகம் தோன்றியது என்பதையும் நீங்கள் அறிவீர்களா?

பெரம்பூரை விஜய் தேர்வு செய்ததன் மூலம், அந்த சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நட்சத்திர அடையாளம் கிடைத்திருக்கிறது. தமிழ் திரைத்துறையிலிருந்து முதன்முதலாகச் சட்டசபைக்குச் சென்றவர் கே.பி.சுந்தராம்பாள் தான். அவரை சத்தியமூர்த்தி மேல் சபைக்குத் தேர்வு செய்து அனுப்பினார். அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல.

Vijay

அவருக்குப் பின் பல திரைப் பிரபலங்கள் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் நாற்காலியில் அமைந்து ஆட்சியே நடத்திவிட்டனர். சினிமா நாயகர்கள் தமிழக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்துவது புதுமை இல்லை. ஆனால், தவெக தலைவர் விஜய் முதன்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார். அதுவும் இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார்.

அவர் தேர்வு செய்திருக்கும் பெரம்பூர் தொகுதிக்குத் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அப்படியா? ஆம்!
கிழக்கிந்திய கம்பெனியர் இந்தியாவுக்கு வணிகம் செய்வதற்காகவே முதலில் வந்தனர். பின் அவர்களே நாட்டை ஆளும் சக்தியாக மாறினர். இந்தியாவுக்கு ஆரம்பக் காலத்தில் ஆண் வெள்ளையர்களே வந்தேறினர். அவர்களுக்குப் பெண் துணை இல்லை.

ஆகவே அவர்கள் இந்தியப் பெண்களை மணம் புரிந்துகொண்டு, உலக வரலாற்றில் ஒரு புதிய சந்ததியை உருவாக்கினர். அப்படி பிரிட்டிஷ் படைவீரர்களுக்கும் இந்தியப் பெண்களுக்கும் பிறந்த சந்ததியினர் 'ஆங்கிலோ - இந்தியன்' என அழைக்கப்பட்டனர்.

பெரம்பூரின் பூர்வ குடிகள்:

இந்த வகுப்பினர் பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னையிலுள்ள பெரம்பூர் பகுதியில்தான் அதிகம் வாழ்ந்து வந்தனர். ஏனெனில், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ரயிலை இயக்கியபோது அந்தப் பணிக்கு ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அதற்கு முன் நிர்வாக முறையில், ஆங்கிலேயர்கள் இம்மக்களை இரண்டாம் கட்ட வேலைக்கு தனக்குப் பணியாள்போல் அருகிலேயே வைத்துக் கொண்டனர்.

இந்த ஆங்கிலோ இந்தியர்களின் மொழி ஆங்கிலமாகவே இருந்தது. முதல் தலைமையில் பிறந்த 'ஆங்கிலோ இந்திய' குழந்தைகள் இந்தியர்களைப் போன்று கறுப்பாக இல்லை. அவர்கள் வெள்ளை நிறத்தில் வெள்ளையரைப் போன்றே தோற்றத்தில் இருந்தனர். கலப்பு அதிகரிக்க அதிகரிக்க இந்தியர்களின் தோற்றத்திற்கு இம்மக்களின் நிறம் மாறத் தொடங்கிவிட்டது.

இவ்வாறு இந்தியப் பெண்களை மணம் செய்தவர்களுக்குப் பிரிட்டிஷ் அரசு சலுகையாக ஒரு தொகையை வழங்கி வந்தது. இந்தியாவில் 'ஐரோப்பியன் அண்ட் ஆங்கிலோ இந்தியன் சங்கம்' 1876இல் தொடங்கப்பட்டது. பின் அது 1926இல் 'அகில இந்திய ஆங்கிலோ இந்தியன் சங்கம்' எனப் பெயர் மாற்றமடைந்தது. அப்படிப் பார்த்தால் 150 ஆண்டுகள் பழமையான சங்கம் இது.

இந்தச் சங்கம் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தது. பிரிவனையின் போது நிகழ்ந்த வகுப்புவாத மோதலுக்கு முகம்மது அலி ஜின்னாவே முழுப் பொறுப்பு எனக் கண்டித்தது. இந்தியாவைப் பிரிக்கக் கூடாது என்றும் இந்த ஆங்கிலோ இந்திய மக்கள் வாதிட்டனர். இன்றைக்கு அரிய இனமாக இந்த மக்கள் சென்னையில் சுருக்கிவிட்டனர். இப்போது அவர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி பெரம்பூர். அடுத்து புரசைவாக்கம்.

அதையொட்டிய ராயபுரம் பக்கமும் வசிக்கிறார்கள். இங்கே வசிக்கும் ஆங்கிலோ இந்தியர்களின் வீட்டு மொழி ஆங்கிலம்தான். சாதாரண அன்றாடம் காய்ச்சிகளைப் போலக் காட்சி தரும் இவர்கள் மிக நேர்த்தியான ஆங்கிலத்தில் பேசுவார்கள். வீட்டுப் பெண்கள் கவுன் அணிவதைப் பார்க்கலாம். யாரும் புடவை கட்டுவதில்லை.

ஆட்டோ ஓட்டுநராக, டாக்சி டிரைவராக அன்றாட கூலிகளாகக் கூட இவர்கள் வேலை பார்க்கிறார்கள். வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களும் உண்டு. ஆனால் நுனி நாக்கில் ஆங்கிலம் தாண்டவம் ஆடும். பள்ளிக்குச் சென்று படிக்காத பலர் ஆங்கிலோ இந்தியர்களாக உள்ளனர். மேல்தட்டு மக்களைப்போல் சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களும் உள்ளனர்.

ஆங்கிலோ இந்தியர்களின் தனிக் கலாச்சாரம்:

இரவில் ஆட்டம், பாட்டம், கிளப் கல்ச்சர் என ஏறக்குறையை ஐரோப்பிய வாழ்க்கை இவர் நடத்திவருகின்றனர். பெண்கள் கூட மதுபானம் மற்றும் சிகரெட் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெரம்பூரில் 'பேப்பர் மில் சாலை' ,'பாக்ஸன் வீதி', 'பலார்ட் சாலை' ஆகிய தெருக்கள் இவர்களின் மையப் பகுதியாகும். இதைத் தாண்டி பல்லாவரம் பகுதியில் கொஞ்ச குடும்பங்கள் உள்ளன.

ஆங்கிலோ இந்தியர்கள் என்றால் அது சென்னையின் அடையாளம் பெரம்பூர் பகுதிதான். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தையே பின்பற்றுகிறார்கள். 1947 இந்தியா விடுதலைப் பெற்றபோது அதிகமான குடும்பங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எனப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். சென்னையைப் பொறுத்தளவில் 40 ஆயிரம் மக்கள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த மக்களின் கலாச்சாரத்தில் பிரபல நாவலாசிரியர் ஆலன் ஷோலி, தன் எழுத்தில் பதிவு செய்துள்ளார். 'தந்தையின் மொழியைப் பேசிக் கொண்டு தாயின் உப்பைத் தின்றவர்கள்' என்று அவரது வார்த்தை கவித்துவமானது. தாய் இந்திய உப்பை நின்றவள். தந்தையோ ஆங்கில மொழியைப் பேசுபவர். இந்த இரண்டின் கலப்பினம் ஆங்கிலோ இந்தியர்கள்.

பெரம்பூரில் உள்ள 'Our lady of Lourde church' இம்மக்கள் வழிபடும் தேவாலயமாகும். இங்கே 175 ஆண்டு பழமையான சர்ச்சுகள் உள்ளன. அதுவே இவர்களின் பூர்வீக சரித்திர சான்று. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. 337 ஷரத்தின் கீழ் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஷரத்து 170இல் ஒரு மாநில சட்டமன்றத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதன்முதலாக 1952 - 57 வரை முதல் பிரதிநிதியாகத் தமிழகச் சட்டமன்றத்தில் டபுள்யு ஜெ பெர்ணாடஸ் நியமன உறுப்பினராக இருந்தார். இவர்களின் பிரதிநிதியை ஆளுநரே நியமிப்பார். தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை. அதன்படி 1952 முதல் 3 ஆண்டுகள், 7 பெண்கள் பதவியில் இருந்துள்ளனர். மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. ஆனால், இந்த நியமன உறுப்பினரையும் சேர்த்தால் மொத்தம் 235.

கிட்டத்தட்ட 68 ஆண்டுகள் வரை இம்மக்களுக்குச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. கடந்த சில வருடங்கள் முன்னர் சட்டத்திருத்தம் செய்யப்பட்டதால், அந்த நியமன உறுப்பினர் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டது. ஆங்கிலோ இந்தியர் சட்டமன்ற உறுப்பினருக்கு அப்போதைய சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்.

பெரம்பூர் மதம் மாறிய கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் என சிறுபான்மை மக்கள் மற்றும் பட்டியலின மக்கள் நிறைந்த தொகுதி. ஆகவேதான் விஜய் அதைக் குறிவைத்தார். இங்குள்ள ஆங்கிலே இந்திய வாக்காளர்கள் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்குப் பலமாக உள்ளனர்.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+