விஜய் ஆட்சிக்கு வர முடியாது? சீமான் வளர்ச்சி உண்மையா?: கார்த்தி சிதம்பரம் Angry
சென்னை: விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் எப்போது தடாலடியாகப் பேசக் கூடியவர். உட்கட்சி விவகாரத்தைக் கூட ஒளிவு மறைவு இல்லாமல் போட்டு உடைக்கக் கூடியவர். அதனால் உட்கட்சிக்குள்ளாகவே சில நேரங்களில் மோதல் போக்கு ஏற்படுவதைப் பார்த்துள்ளோம். சமீபத்தில் இவர் தெரிவித்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறுத்துப் பேசி இருந்தார்.

இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கி இருப்பது, சீமானின் வளர்ச்சி, காங்கிரஸ் கட்சியின் தேக்கம் பற்றி பல விசயங்களை அவர் வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார். "மாநில அளவில் பலருக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்புகளை வழங்குகிறது. ஆனால், அந்தப் பதவிக்கு ஒரு அதிகாரமும் இல்லை. வெறும் பேருக்குப் பதவி தருகிறார்கள். அதிகாரத்தை முழுக்க மத்தியில் குவித்து வைத்துக் கொள்கின்றன தேசிய கட்சிகள். அது காங்கிரசுக்கும் பாஜகவுக்குமே பொருந்தும்" என்று பேசி இருக்கிறார்.
ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கார்த்தி சிதம்பரம், "காங்கிரஸ் தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பது இல்லை. அதே மாதிரி கீழேவும் போகவில்லை. கடந்த பல வருடங்களாக ஒரே நிலையில் சீராகவே உள்ளது. அதற்குக் காரணம், இளைஞர்கள் அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி மட்டும் வரவில்லை என நான் சொல்லவில்லை. அதிமுக, திமுக பக்கம்கூட அதிகமாக இளைஞர்கள் வரவில்லை. உணர்ச்சிகரமாகப் பேசக்கூடிய சீமான் போன்ற தலைவர்கள் பக்கம் போகிறார்கள். அதுகூட அதிக அளவில் இல்லை. குறைந்த எண்ணிக்கையில்தான் போய் இருக்கிறார்கள்.
இப்போது விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். அவரது ரசிகர்கள் அந்தக் கட்சி பக்கம் போவார்கள். அதுவும் கூட பெரிய அளவில் இருக்காது. இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் மீது நாட்டம் இல்லை. ஈர்ப்பு குறைவாகவே உள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்பதால், இளைஞர்கள் அனைவரும் விஜய் பக்கம் போய்விடமாட்டார்கள். வேறு நடிகரின் ரசிகர்கள் விஜய் பக்கம் போய்விடமாட்டார்கள். அவர் சினிமாவில் இருந்த போது யார் ரசிகர்களாக இருந்தார்களோ அவர்கள்தான் போவார்கள்.
அந்தக் கட்சி எதிர்காலத்தில் பெரிய அளவு வளருமா என்பது எனக்குத் தெரியாது. தவெகவிடம் லெட்டர் பேட் உள்ளது. கொடி உள்ளது. கட்சி உள்ளது. அவர்கள் கொள்கை என்ன? எப்படிச் செயல்படப் போகிறார்கள் என எதுவுமே தெரியாது. சினிமா நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி இருப்பதால் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஐஐடியில் படித்துவிட்டு ஒரு இளைஞர் நாட்டை மாற்ற ஒரு கட்சித் தொடங்கப் போகிறேன் என்று ஒருவர் கூட செய்தி போடமாட்டார்கள். அதுதான் இங்கே நிலை.
சீமானின் கொள்கை தமிழ்த் தேசியம் என்கிறார். வீரப்பன், பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்கிறார். தமிழ்த் தேசியம் என்ன என்றால் அவர்களால் விளக்கம் தரமுடியாது. தனித் தமிழ்நாடு வேண்டுமா? இல்லை இந்தியாவை விட்டுப் பிரிய வேண்டும் என்கிறார்களா? எதிலும் தெளிவு இல்லை. கடந்த 10 தேர்தலுக்கு மேல் சீமான் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். ஒரு தேர்தலில் போட்டியிட்டவர் மறுதேர்தலில் நிற்கமாட்டார். காணாமல் போய்விடுவார். அந்தக் கட்சியில் சேருபவர்களை விட, ஏமாற்றம் அடைந்து வெளியேறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஆகவே, அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளராது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது உண்மைதான். இதை காவல்துறைக்குத் தெரியாமல் யாரும் செய்ய முடியாது. அதேபோல கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை சட்டப்படி மிகக் கடுமையாகத் தடுக்க வேண்டும்" என்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி, "அந்தக் கொலைவழக்கில் மொத்தம் 27 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அதில் பாஜக, திமுக, அதிமுக எனப் பல கட்சியில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இது அரசியலுக்காக நடந்த கொள்கை ரீதியான கொலை அல்ல. வேறு ஏதோ வர்த்தகம் சம்பந்தமாகவோ அல்லது முன் பகை சம்பந்தமாகவோ நடந்த கொலை.
பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொள்கை சரியில்லை என்று யாரும் அவரை கொலை செய்யவில்லை. முற்றிலும் இது வேறு நோக்கத்தில் நடந்த கொலை. எல்லா கட்சிகளிலும் ரவுடிகள் தங்களின் சொந்த ஆதாயத்திற்காக அடைக்கலம் அடைகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் கூட பாஜகவில் ரவுடி பட்டியலில் உள்ள 260 பேர் உள்ளதாக அறிக்கை வெளியிட்டார். இதை வைத்து பாஜகவை ஒரு ரவுடி கட்சி என்று நான் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வது சரியா? சரியில்லையே" என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications