விஜய் சிக்கிவிடக் கூடாது.. லாட்டரி குடும்பம் தமிழ்நாட்டை கவ்வ பார்க்கிறது.. பழ.கருப்பையா வார்னிங்
சென்னை: 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த இரு திராவிட கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி தவெக ஆட்சி அமைத்துள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகளவில் விஜய் ஆதரவு இருந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை விஜய் உருவாக்குவார் என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு இருக்கின்றனர். ஆனால் அதிமுகவில் இருந்து பலரும் தவெக பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி நடந்திருக்கிறது. 50 ஆண்டுகளாக ஊழலை பற்றி பேசிக் கொண்டே இருந்தோம். அந்த ஊழலை ஒழிப்பதற்கு மக்களோ, அரசியல் கட்சிகளோ தயாராக இல்லை.

அத்தகைய நம்பிக்கையை பெற்ற மனிதர் என்று மக்கள் யாரையும் அடையாளம் காணவில்லை. இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்றார் என்பதை விட, மக்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தாங்கள் விரும்பிய ஆட்சியை அமைக்க மக்கள் விஜய்யை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார்கள். நான் கூட விஜய் வெல்வார் என்று நம்பவில்லை. விஜய்யே நம்பினாரா என்று தெரியவில்லை.
மக்கள் வேட்பாளர்களை பற்றிக் கூட கவலைப்படவில்லை. பணத்தின் சக்தியை தோற்கடித்துள்ளார்கள். முகம் தெரியாத வேட்பாளர்களுக்கு சாதி மதம் கடந்து வாக்களித்த்யுள்ளனர். இந்த புரட்சி உயரிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்கான அடையாளம். இலவசங்களை மக்கள் வெறுத்தார்கள். நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று விஜய் சொன்ன சொல் நம்பிக்கையை பெற்றுள்ளது.
விஜய்யால் தவறான மனிதர்களை வைத்து கொண்டு சரியான செயல்களை செய்ய முடியாது. விஜய் பலியாகிவிடுவாரோ என்று அஞ்சுகிறேன். சிவி சண்முகம் வீட்டிற்கு விஜய் போனதும், அங்குள்ளவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதும் மக்களிடையே தவறான நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது. விஜய் வந்துவிட்டதால், நமக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார் என்று அதிமுக எம்எல்ஏ-க்களை நம்ப வைத்துள்ளது.
ஆட்சியை தக்க வைக்க தவறான மனிதனை தேடி சென்றதால், ஆட்சியையே தவறானதாக்கிவிடும் என்பதால் இதனை சொல்கிறேன். லீமா ரோஸ் அமைச்சராக போவதாக சொல்லப்படுகிறது. லாட்டரி குடும்பம் தமிழ்நாடு அரசியலை கவ்வி கொள்ள இடம் கொடுக்க கூடாது. அதிமுகவில் பலர் மீது வழக்குகள் இருக்கிறது. ஆட்சியின் நோக்கத்தையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோற்கடித்துவிடுவார்கள்.
விஜய் பலவீனமடையும் வரை நாடாள வேண்டும் என்பதே திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. அவர்களால் எந்த ஆபத்தும் இல்லை. வெளியில் இருந்து ஆதரவளிப்பர்களால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஊழல் செய்த அதிமுகவினர் ஆட்சியில் பங்கெடுப்பதால் சிக்கல் இருக்கிறது. நல்ல காரியங்களை விஜய் விரைவாக செய்ய வேண்டும். அதுவே என்னுடைய கனவு என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications