2 தொகுதிகளில் போட்டியிட்ட விஜய்.. இடைத்தேர்தல் செலவை வசூலிக்க கோரி வழக்கு.. ஐகோர்ட் அதிரடி
சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம், தனது 2004 ஆம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரையில், எந்தவொரு வேட்பாளரும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால், இது தொடர்பான சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை; அது தனிநபர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தொடர்ந்து அனுமதிப்பதுடன், இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று அவற்றில் ஒன்றை காலி செய்தால், சம்பந்தப்பட்ட தனிநபர்கள் இடைத்தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என்று கூட வலியுறுத்துவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாயன்று சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டு தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் இடை தேர்தலுக்கான செலவை வசூலிக்க வேண்டும் என்ற மனுவையும் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசியல் வரலாற்றில், 2 தொகுதிகளில் ஒரே நபர் போட்டியிடும் வழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, காங்கேயம் மற்றும் பர்கூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அவரைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.
2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 22 -ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிகழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் எந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் அல்லது இரண்டிலும் வெற்றி பெறுவாரா என்று பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அதே நேரம் சிலர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் வரிப் பணத்தை வீணாக்கும் செயல் என்று விமர்சித்தும் வருகிறார்கள்.
இந்த சூழலில்தான் தேர்தல்களில் இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்யும் போது, தேர்தல் செலவை திருப்பி செலுத்துவதாக உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மேலூரைச் சேர்ந்த மணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், "சட்டமன்றம், மக்களவை தேர்தல்களில் சில வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதனால் அரசுக்கு செலவு ஏற்படுகிறது.
எனவே, இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ராஜினாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் , வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.














Click it and Unblock the Notifications