என் தலைவன்.. விஜய்யை போலவே ஆடை அணிந்து வாக்களித்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்ததற்கு காரணம் ஒரு இளைஞர் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தல் அரசியலுக்கு வரலாம் என்று கூறிய எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் எனக்கு தலைவன் என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சட்டசபைத் தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோடை வெப்பம் காரணமாக காலையில் இருந்தே வாக்குச்சாவடிகளில் அதிகளவில் கூட்டம் நிரம்பி வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினரும் வாக்களித்து வருகின்றனர்.
குறிப்பாக தவெக தலைவர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோரும் அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். எஸ்.ஏ.சந்திரசேகரின் உடை அப்படியே விஜய்யை நகலெடுத்ததை போல் இருந்தது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், இந்த தேர்தலில் இளைஞர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டுவதற்கு ஒரு இளைஞர் தான் காரணம். அந்த இளைஞர் என் மகன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தல் அரசியலுக்கு வரலாம். விஜய் என் மகனாக இருந்தாலும், எனக்கு தலைவன்.
அதனால் அவரை போலவே உடையணிந்து வாக்கு செலுத்தினேன். என்னை போலவே தவெகவினர் பலரும் வாக்களித்துள்ளனர். அவரை போலவே உடையணிய வேண்டும் என்று ஆசை வந்தது. அதேபோல் வாக்களிக்க உரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். இம்முறை 95% வரை வாக்குப்பதிவு நடக்கும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications