சிக்கலில் விஜய்! பாஸ் மார்க் போடுமா பெரம்பூர்.. திருச்சி கிழக்கு விசில் அடிக்குமா? கலவரமான களநிலவரம்
சென்னை:தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் இந்த முறை முதன்முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக விஜய் சென்னையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கிறிஸ்தவ வெள்ளாளர், சிறுபான்மையினர் ஓட்டுகளை குறி வைத்தே அங்கு களமிறங்கி இருக்கும் நிலையில், எந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகப் போகிறார் விஜய் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்கனவே தங்களது பிரச்சார வேகத்தை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இரு தொகுதிகளில் இந்த தேர்தலில் களமிறங்குகிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். மேலும், தனது கட்சி தொண்டர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தவெக விஜய்
மேலும், இந்த தேர்தலில் விஜய் இரண்டு முக்கிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, மற்றொன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி. இந்த இரண்டு தொகுதிகளுமே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், இங்கு நடக்கும் தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும் என்கின்றனர். பெரம்பூர் தொகுதியை எடுத்துக்கொண்டால், இது நீண்ட காலமாக திமுக வலுவாக உள்ள பகுதியாக கருதப்படுகிறது.
பெரம்பூர் தொகுதி
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அவர் மீண்டும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரம்பூர் தொகுதி திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது.
ஆர்.டி. சேகர்
சமூக அமைப்பைப் பொருத்தவரை பெரம்பூர் தொகுதியில் பெரும்பாலானவர்கள் தினக்கூலி வேலை செய்து வரும் நடுத்தர மற்றும் கீழ்மட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் குறிப்பிடத்தக்க அளவில் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்களும் உள்ளனர். இந்த முறை திமுக சார்பில் மீண்டும் ஆர்.டி. சேகர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனியாக களம் காண்கிறது. இதனால் இந்த தொகுதியில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. சுமார் 2.22 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி
அடுத்ததாக திருச்சி கிழக்கு தொகுதியை எடுத்துக்கொண்டால், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது. 1952ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில் பல முறை திமுக மற்றும் அதிமுக மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெள்ளமண்டி நடராஜன் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார்.
இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர்கள், பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை சேர்ந்த வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். இந்த தொகுதியிலும் திமுக சார்பில் மீண்டும் இனிகோ இருதயராஜ் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சுமார் 2.20 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் முதல் முறை வாக்காளர்கள் மற்றும் மத அடிப்படையில் வாக்களிக்கும் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
எதில் விஜய் வெற்றி?
இதன் மூலம், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. விஜய் முதன்முறையாக தேர்தலில் களமிறங்குவதால், அவரது தனிப்பட்ட ஆதரவு எந்த அளவுக்கு வாக்குகளாக மாறும் என்பது இந்த தேர்தலில் தெரிந்து விடும். விஜய் போட்டியிரும் இரு தொகுதிகளிலும், எதில் விஜய் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவார் என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தான் உறுதியாக தெரிய வரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications